மூன்று நாட்கள் மருத்துவ ஓய்வில் இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், மருத்துவமனையில் இருந்தபடியே அலுவலகப் பணிகளை கவனித்து வருகிறார். “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆலோசனை
CM Stalin Government Work : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தியும், புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும் வருகிறார். அந்த வகையில் தொடர் பயணங்கள், கட்சி பணிகள் என தொடரும் பணிகளால் உடல் நிலை பாதிப்பு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் நேற்று நடைபயிற்சி சென்ற முதலமைச்சருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஒரு சில நாட்கள் முதலமைச்சர் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க இருந்த அரசு நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மருத்துமனையில் முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர் மூன்று நாட்கள் ஓய்வு மற்றும் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார். மருத்துவமனையில் இருந்தபடியே அவர் அலுவலகப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்ததன் அடிப்படையில் இன்று (22.7.2025) அவர் அரசு தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப. அவர்களுடன் அரசுப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.கடந்த 15.7.2025 தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வரும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் பணிகளின் முன்னேற்றம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேட்டு அறிந்தார்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் நிலை என்ன.?
நேற்றைய தேதி வரை இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 5,74,614 மனுக்கள் வரப்பெற்றுள்ளன. இதில் எத்தனை மனுக்களுக்கு தீர்வுகள் காணப்பட்டுள்ளன. பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் உரிய துறைகள் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனவா போன்ற விவரங்களை கேட்டறிந்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தொடர்ந்து இந்த முகாம்கள் அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி நடத்தப்பட வேண்டும் என்றும்,
முகாம்களுக்கு மனுக்களை அளிக்க வரும் மக்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுத்தல் குறித்தும் அறிவுரை வழங்கினார். மேலும், பெறப்படும் மனுக்களின் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் எவ்வித தொய்வுமின்றி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.
