ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு... U வடிவ மேம்பாலத்தை திறந்து வைத்த ஸ்டாலின்
போக்குரவத்து நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் ஓஎம்ஆர் சாலையில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள U வடிவ பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
![Chief Minister Stalin inaugurated the U-shaped flyover at Chennai OMR KAK Chief Minister Stalin inaugurated the U-shaped flyover at Chennai OMR KAK](https://static-ai.asianetnews.com/images/01hfxe7c1x9wwbg4fewt0qw52g/whatsapp-image-2023-11-23-at-11-56-14-am_363x203xt.jpg)
உட்கட்டமைப்பு வசதி
பொருளாதாரத்தின் அங்கங்களான விவசாயம், தொழில், வணிகம், சுற்றுலா, போன்ற துறைகளின் மேம்பாட்டிற்கு சாலை உட்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலத்தில் புதிய சாலைகள் மற்றும் பாலங்கள் அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல், கிராமப்புறங்களுக்கு இணைப்புச் சாலைகள் அமைத்தல் போன்ற முக்கியப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம், தமிழ்நாடு அரசு, நெடுஞ்சாலைத் துறை வாயிலாக தரமான மற்றும் பாதுகாப்பான சாலை கட்டமைப்பினை சிறந்த முறையில் உருவாக்கி, பராமரித்து வருகிறது.
'U' வடிவ மேம்பாலங்கள்
இந்தநிலையில் ராஜீவ் காந்தி சாலையில் (ஓ.எம்.ஆர்), இந்திரா நகர் சந்திப்பு மற்றும் டைடல் பார்க் சந்திப்பில் அமைந்துள்ள இரண்டு போக்குவரத்து சமிக்ஞைகளில் தற்போது வாகனங்கள் சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணும் வகையில், மேற்கண்ட இந்திரா நகர் சந்திப்பு மற்றும் டைடல் பார்க் சந்திப்பு ஆகிய இரண்டு சந்திப்புகளிலும் 'U' வடிவ மேம்பாலங்கள் அமைக்க முடிவெடுக்கப்பட்டது.
18 கோடியில் 237 மீட்டர் பாலம்
அதன்படி, இந்திரா நகர் மற்றும் டைடல் பார்க் சந்திப்புகளில் 'U' வடிவ மேம்பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த போக்குவரத்து உள் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளுக்காக ரூ.108.13 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. இப்பணிகளுள் ஒன்றான 18.15 கோடி செலவில் இந்திரா நகர் 'U' வடிவ மேம்பாலப் பணிகள் முழுவதும் தற்போது முடிக்கப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்திரா நகர் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள 237 மீட்டர் நீளமுள்ள இப்பாலம், 12.5 மீட்டர் நீளமுள்ள 19 கண்களை கொண்டதாகும். ராஜீவ் காந்தி சாலையின் வலது புறத்தில் இந்த பாலத்தின் ஏறு சாய்தளம் 120 மீட்டர் நீளத்திற்கும், இடது புறத்தில் இறங்கு சாய்தளம் 120 மீட்டர் நீளத்திற்கும் அமைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல்
இந்திரா நகர் "U" வடிவ மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படுவதால், சோழிங்கநல்லூர் திசையில் இருந்து வரும் வாகனங்கள் இந்திரா நகர் மேம்பாலம் வழியாக ஏறி "U" திருப்பம் எடுத்து, இந்திரா நகர் வழியாக அடையாறு மற்றும் திருவான்மியூர் ஆகிய பகுதிகளுக்கு போக்குவரத்து நெரிசலின்றி விரைந்து செல்ல இயலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்