கிளாம்பாக்கத்தில் பெரிய பிரச்சனைகளை எல்லாம் தீர்த்துவிட்டோம்... சிறு பிரச்சனைகளும் தீர்க்கப்படும் - ஸ்டாலின்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்த பெரிய பெரிய பிரச்சனைகளை எல்லாம் தீர்த்துவிட்டோம். எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டும் சிறு பிரச்சனைகளும் தீர்த்து வைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்- பயணிகள் அவதி
சென்னை கோயம்பேட்டிலு செயல்பட்டு வந்த பேருந்து நிலையம் கிளாம்பாக்கம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். கிளாம்பாக்கத்திற்கு செல்ல எந்த வித இணைப்பும் போக்குவரத்து இல்லையென குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிஐலயில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று பிரச்சனை எழுப்பப்பட்டது.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜூ, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் கிளாம்பாக்கத்துக்கு மாற்றப்பட்டதால் மக்கள் அவதிப்படுவதாகவும், மக்கள் வசதிக்காக பேருந்துகளை அதிகப்படுத்த வேண்டும், மக்கள் அமைச்சரை சபாஷ் என வாழ்த்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினார்.
கிளாம்பாக்கத்தை மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டனர்
அதற்கு பதிலளித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்க அதிமுக அரசு தான் முடிவெடுத்ததாகவும், 30% மட்டுமே முடிக்கப்பட்ட பணியை திமுக அரசு சிறப்பாக முடித்து நிறைவேற்றியதாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், ஒரு மாற்றம் வரும் போது சில தயக்கம் இருக்கும் எனவும், பாரிமுனையில் இருந்து கோயம்பேட்டிற்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்ட போதும் இதே பிரச்சினை இருந்ததாக கூறிய அமைச்சர், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டதாகவும், பேருந்தில் பயணிப்பவர்கள் யாரும் குறை சொல்லவில்லை, பயணிக்காதவர்கள் தான் பிரச்சனை செய்வதாக தெரிவித்தார். மக்களின் நலன் கருதி தான் வடசென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 20% பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், இனி தென் மாவட்டங்களுக்கு கோயம்பேட்டில் இருந்து இயக்க வாய்ப்பில்லை என தெரிவித்தார்.
சிறிய பிரச்சனைகளும் தீர்க்கப்படும்
அவரை தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளதாக கூறிய அவர், பேருந்து நிலையத்துக்கு கலைஞர் பெயர் வைத்தது தான் எதிர்க்கட்சிகளுக்கு பிரச்சனை என கூறினார். அவரை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பயணிகள் பாதிப்பு குறித்து ஊடகங்களில் வெளி வந்த செய்திகளின் அடிப்படையில் தான் அறிக்கை வாயிலாக சுட்டிக்காட்டியதாக கூறினார்.
சிறு சிறு பிரச்சனைகள் உள்ளதாக அமைச்சரே கூறியுள்ளார். அதை சரி செய்தப்பின் திறந்திருக்கலாமே என தான் கேட்கிறோம் என பேசினார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், பேருந்து நிலையத்தில் சிறு சிறு பிரச்சனை அல்ல பெரிய பிரச்சனைகளே இருந்தது. அவற்றையெல்லாம் தீர்த்து வைத்துள்ளோம். நீங்கள் சுட்டிக்காட்டும் பிரச்சனைகளும் தீர்த்து வைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்