தமிழகத்தில் புதியதாக 10 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும்..! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
2022-2023-ஆம் ஆண்டு சுய உதவிக் குழுக்களுக்கு இலக்கை தாண்டி 25 ஆயிரம் 642 கோடி ரூபாய், 4 லட்சத்து 49 ஆயிரத்து 209 சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கி அரசு சாதனை படைத்திருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாநில அளவிலான மூன்றாவது மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் (DISHA) கூட்டம் - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சமூக ஒருங்கிணைப்பு மற்றும் நிறுவன கட்டமைப்புக்காக 2023-2024-ஆம் ஆண்டில் புதியதாக 10 ஆயிரம் சுய உதவிக் குழுக்கள் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அவற்றுக்குச் சுழல் நிதியாக வழங்க 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 5 ஆயிரம் சுய உதவிக் குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதியாக 75 கோடி ரூபாயும், 3 ஆயிரம் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு வறுமை நிலை குறைப்பு நிதியாக 7.50 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் 10 ஆயிரம் புதிய சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடிப்படை பயிற்சி வழங்கவும், ஊக்குநர் மற்றும் பிரதிநிதிகளுக்கு பயிற்சி வழங்க 330 கோடி ரூபாய், 12,287 ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் 388 வட்டார அளவிலான கூட்டமைப்புகளின் அலுவலக நிர்வாகிகளுக்கு ஆளுமை மற்றும் நிதிமேலாண்மை குறித்த புத்தாக்கப் பயிற்சி வழங்க 24 கோடியே 96 லட்சம் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2023-24ஆம் ஆண்டில் பண்ணை வாழ்வாதார நடவடிக்கை பணிகளுக்காக 60.27 கோடி ரூபாயும், பண்ணை சாரா வாழ்வாதார நடவடிக்கை பணிகளுக்காக செய்யப்பட்டுள்ளது 18.64 கோடி ரூபாயும் ஒதுக்கீடு
மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக 2022-23-ஆம் ஆண்டில் நடைபெற்ற கண்காட்சிகளில் 3,528 சுய உதவிக் குழுக்கள் 3 கோடியே 75 லட்சம் ரூபாய் அளவில் விற்பனை செய்துள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் 137 விற்பனை அங்காடி (Kiosk) அமைக்கப்பட்டு சுய உதவிக் குழு தயாரிப்புகளை ஒருங்கிணைத்து விற்பனை செய்யப்படுவதுடன், முறையான பேக்கிங் மற்றும் தயாரிப்புகளை தரப்படுத்துவற்கான முன்முயற்சிகள் எடுக்கப்பட்டு மதி வணிக முத்திரை வழங்கப்பட்டுள்ளது. 2022-2023-ஆம் ஆண்டு சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்க 25 ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதையும் தாண்டி 25 ஆயிரம் 642 கோடி ரூபாய், 4 லட்சத்து 49 ஆயிரத்து 209 சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கி நமது அரசு சாதனை புரிந்துள்ளது என்பதை இங்கு பெருமிதத்துடன் நான் குறிப்பிட விரும்புகிறேன்.
2023-24-ஆம் ஆண்டில், மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு புதிய முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக ‘மதி சந்தை' என்ற இணையவழி விற்பனை தளம் உருவாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை அவர்களுக்குள்ளாகவும் பிற பெரும் வணிக நிறுவனங்கள் மூலமாகவும் விற்பனை செய்வதற்காக மாநில மற்றும் மாவட்ட அளவில் வாங்குவோர் - விற்போர் சந்திப்பு நடத்தப்படும்.
நன்றே செய் அதையும் இன்றே செய்" என்ற வகையில் எல்லாருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து மக்களுக்கு நன்மை தரும் திட்டங்களை சிறிதும் தாமதமின்றி செயல்படுத்தி, திட்டங்களின் பயன் முழுமையாக மக்களைச் சென்றடைய துறைத் தலைவர்களும், அரசு அலுவலர்களும் முழுமனதுடன் செயல்பட வேண்டும். தங்களுக்குக் கீழ் பணியாற்றுவோரும் அவ்வாறு செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.