வேதனை தாங்க முடியல.. கிணற்றில் மூழ்கி 4 பேர் இறப்பு - இரங்கல் தெரிவித்த கையோடு நிவாரணம் அறிவித்த முதல்வர்
கிணற்றில் மூழ்கி 4 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுக்கா, நாமகிரிப்பேட்டை அடுத்த மெட்டாலா கணவாய்பட்டியை சேர்ந்த குப்புசாமி மகன் அபினேஷ் (15), கம்மாளப்பட்டி கண்ணன் மகன் நித்தீஷ்குமார் (15), சமத்துவபுரம் பொன்னுசாமி மகன் விக்னேஷ் (13).
இதில் அபினேஷ், கண்ணன் ஆகிய இருவரும் அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பும், அதே பள்ளியில் விக்னேஷ் 8-ம் வகுப்பு படித்து வருகின்றனர். விடுமுறை நாளான சனிக்கிழமை மதியம் 1 மணியளவில் ஒரே இரு சக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளனர். இரு சக்கர வாகனத்தை அபினேஷ் ஓட்டி சென்றார்.
அப்போது அங்கு சாலையோரம் இருந்த 100 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றில் தவறி விழுந்தனர். அவர்களுக்கு பின்னால் மற்றொரு வாகனத்தில் வந்த அபினேஷ் தந்தை குப்புசாமி (58), கணவாய்பட்டியை சேர்ந்த அசோக்குமார் (38), சரவணன் (35) ஆகிய 3 பேரும் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அவர்களை காப்பற்ற 3 பேரும் கிணற்றில் குதித்துள்ளனர்.
இதில் அபினேஷ், நித்தீஷ்குமார் ஆகிய இருவரும் மீட்கப்பட்டனர். எனினும், விக்னேஷை மீட்க இயலவில்லை. தவிர, அவரைக் காப்பாற்ற முயன்ற குப்புசாமி, அசோக்குமார், சரவணன் 3 பேரும் நீரில் மூழ்கினர்.3 மணி நேர போராட்டத்துக்குப் பின் 4 பேரும் கிணற்றில் இருந்து சடலமாக மீட்க்கப்பட்டனர்.
கிணற்றில் விழுந்த பள்ளி மாணவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட தந்தை உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படு்த்தி உள்ளது. கிணற்றில் மூழ்கி உயிரிழந்த பள்ளி மாணவன் உள்பட 4 பேரின் உடல்களுக்கு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்.பி., கலெக்டர் உமா ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத்தை அறிவித்துள்ளார். அதன்படி, கிணற்றில் மூழ்கி உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.