சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 78.4% வாக்குப்பதிவு பதிவான நிலையில், 51,543 வாக்குகள் பெற்று உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார்.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எப்போதுமே திமுகவின் பாரம்பரியக் கோட்டையாகக் கருதப்பட்டு வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் பேராசிரியர் அன்பழகன் போன்ற தலைவர்கள் வென்ற பெருமை இத்தொகுதிக்கு உண்டு. கடந்த 2011 மற்றும் 2016 தேர்தல்களில் ஜெ. அன்பழகன் முறையே 9,203 மற்றும் 14,164 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இக்கோட்டையை வலுவாக வைத்திருந்தார்.

உதயநிதி ஸ்டாலின் வெற்றி

2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இத்தொகுதியில் மீண்டும் களம் கண்டுள்ளார். 13 சுற்றுகளின் எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட தவெகவின் செல்வம் தோல்வியை சந்தித்துள்ளார்.

திமுகவின் உதயநிதி ஸ்டாலின் 51,543 வாக்குகள் பெற்று முன்னிலையிலும், தவெகவின் செல்வம் 41,662 பெற்று பின்னடைவையும் சந்தித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் 9,881 வாக்குகள் வித்தியாத்தில் வெற்றி பெற்றுள்ளார். இது திமுக தொண்டர்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் தனிப்பட்ட செல்வாக்கும் சொத்து விவரமும்

48 வயதான உதயநிதி ஸ்டாலின், கடந்த 2021 தேர்தலில் 69,355 வாக்குகள் என்ற இமாலய வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். இந்தத் தேர்தலுக்காக அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின்படி, அவருக்கு ₹12.92 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களும், ₹7.72 கோடி மதிப்பிலான அசையாச் சொத்துக்களும் உள்ளன. தொகுதியில் அவர் மேற்கொண்ட மக்கள் தொடர்புப் பணிகள் இந்த முன்னிலைக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

வாக்குப்பதிவு சதவீதம் தந்த அதிரடி மாற்றம்

இந்த ஆண்டு சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வாக்குப்பதிவு வியக்கத்தக்க வகையில் 78.4% ஆகப் பதிவாகியுள்ளது. கடந்த 2021-ல் 58% ஆக இருந்த வாக்குப்பதிவு, தற்போது சுமார் 20% அதிகரித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூடுதல் வாக்குகள் உதயநிதியின் வெற்றிக்கு வலு சேர்த்துள்ளன.

அரசியல் திருப்புமுனை: திமுகவின் அடுத்தகட்ட நகர்வு

மாநில அளவில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும், உதயநிதி ஸ்டாலின் தனது சொந்தத் தொகுதியில் வெற்றி காண்பது அவரது தனிப்பட்ட செல்வாக்கைப் பறைசாற்றுகிறது. இத்தொகுதியில் அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், உதயநிதியின் இந்த வெற்றி வரும் காலங்களில் திமுகவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளுக்கு ஒரு முக்கிய அடித்தளமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.