“சென்னையை நெருங்குகிறது சோதனை…” – நாளுக்கு நாள் குறையும் நிலத்தடி நீர்
தமிழகத்தில் பருவமழை பொய்த்துபோனது. இதனால், சென்னை நகரில் நிலத்தடி நீரின் அளவு 0.97 மீட்டர் முதல் 2.91 மீட்டர் வரை குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த்த 2015ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதம் மற்றும் கடந்த மாதம் 12ம் தேதி பெய்த மழை காலங்களில், சென்னை நகரில் நீரின் அளவு ஒப்பிடும்போது சென்னையில் உள்ள 15 பகுதிகளில் நிலத்தடி நீரின் அளவு 0.97 மீட்டர் முதல் 2.91 மீட்டர் வரை குறைந்துள்ளது.
பருவமழை பொய்த்ததால், 2016ம் ஆண்டில் தமிழகத்தில் சென்னையை தவிர மொத்த மழைப்பொழிவு 61 சதவீதம் பற்றாக்குறையானது. சென்னை மாநகரில் 23 சதவீத பற்றாக்குறையோடும் பெய்துள்ளது.
குறைந்த அளவில் மழை பெய்த்தால், குடிநீரைச் சிக்கனமாக பயன்படுத்த சில வழிமுறைகளை சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரியின் நீர்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது. சோழவரம் மற்றும் பூண்டி ஏரிகளும் மணல் கொள்ளையால் நாளுக்கு நாள் வறண்டு கொண்டு செல்கிறது. இதற்கிடையில், கிருஷ்ணா நதி நீர் வழங்கும் காலமும் கடந்த மாதம் முடிந்துவிட்டது. அதிலும் எதிர் பார்த்த அளவுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வரும் கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு சோதனை காலம் நெருங்கி வருகிறது. இதனை தவிர்க்க மழை பெய்ய வேண்டும். அப்படி மழை பெய்தாலும், அதனை முறையாக தேக்கி வைக்க அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.