ரிமோட் மூலம் போக்குவரத்து சிக்னல்களை இயக்குவதின் மூலம் போக்குவரத்து நெரிசலுக்கு தகுந்தவாறு ரிமோட் மூலம் சிக்னல்களை உடனுக்குடன் மாற்றி அமைக்க முடியும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் காலை, மாலை இரு வேளைகளிலும் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பற்றி சொல்லவே வேண்டாம். பள்ளி, கல்லூரி, அலுவலகம் உள்ளிட்ட அத்தியவாசிய பணிகளுக்கு செல்லும் மக்கள், வாகன நெரிசலில் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். வாகனங்களின் எண்ணிக்கை தொடந்து அதிகரித்து வருவதால், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது.

சென்னயில் முக்கிய சாலைகளில் குறிப்பாக, அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை,காமராஜர் சாலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட சாலைகளில் அதிக நெரிசல் ஏற்படுகிறது. இதர சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதனால் பெரும்பாலானோர் இரயில், மெட்ரோ உள்ளிட்ட பொது போக்குவரத்தை தேர்வு செய்கின்றனர்.பரப்பரப்பான நேரங்களில் வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாதபடி, சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. வாகனங்களை ஒழுங்குபடுத்தவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் போக்குவரத்து போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சாலை சந்திப்பில் பிரேத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கூண்டுக்குள் நின்றவாறு, போக்குவரத்து சிக்னல்களை போலீஸார் இயக்கி வருகின்றனர்.

சில நேரங்களில் வாகன ஓட்டிகளால் மீறப்படும் விதிமீறல்களால் விபத்து ஏற்படுகிறது. இதனால் விபத்துகளை குறைக்கவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் ரிமோட் முறையில் இயங்கும் சிக்னல்கள் அமைப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதற்கட்டமாக 5 இடங்களில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரில் போக்குவரத்து கூடுதல் ஆணையர் தலைமையிலான போலீசார், ரிமோட் மூலம் இயங்கும் போக்குவரத்து சின்னல்களை அமைக்க முடிவு செய்தனர்.முதல்கட்டமாக வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம் அருகேயுள்ள ஈவிகே.சம்பத் சாலை, எழும்பூர் காந்தி இர்வீன் சாலை, வேப்பேரி ரித்தர்டன் சாலை, எழும்பூர் நாயர் பாலம் பகுதி, புரசைவாக்கம் தாசப்பிரகாஷ் ஆகிய 5 இடங்களில் ரிமோட் மூலம் இயங்கும் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டு, சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது.

விரைவில் சென்னையில் முழுவதும் ரிமோட் மூலம் இயங்கும் சிக்னல்கள் படிப்படியாக அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிமோட் மூலம் போக்குவரத்து சிக்னல்களை இயக்குவதால், சாலை சந்திப்புகளில் நேரடியாக நின்றுகொண்டு, வாகனங்களின் எண்ணிக்கை, நெரிசலுக்கு தகுந்தவாறு ரிமோட் மூலம் பச்சை, மஞ்சள், சிவப்பு சிக்னல்களை உடனுக்குடன் மாற்றி அமைக்க முடியும். ஆம்புலன்ஸ் வாகனம் வந்தால்கூட நெரிசலின்றி கடந்து செல்ல உதவ முடியும். மேலும், பாதசாரிகள் சாலையைக் கடக்கவும் உதவ முடியும் என்று போக்குவரத்துதுறை போலீசார் கூறினர்.
