ஜெய்பீம் பட சர்ச்சை...சூர்யா, ஜோதிகா மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஜெய்பீம் படத்தில் குறிப்பிட்ட சாதியினரை விமர்சித்து படம் எடுக்கப்பட்டதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், பட தயாரிப்பாளர் சூர்யா மற்றும் ஜோதிகா மீது வழக்கு தொடர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த ஜெய்பீம்
நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள "ஜெய்பீம்" படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. . இந்தத் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகக் கூறி ஒரு தரப்பினர் ஜெய்பீம் படத்திற்கும் நடிகர் சூர்யாவிற்கும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இதன் காரணமாக நடிகர் சூர்யா வீட்டிற்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் ஜெய்பீம் படம் தொடர்பாக ருத்ர வன்னியர் சேனா என்ற அமைப்பினர் தலைவர் சந்தோஷ் நாயகர் வேளச்சேரி காவல்நிலையத்திலும், சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்திலும் புகார் தெரிவித்திருந்தார். இந்த புகார் மீது வழக்கு பதிவு செய்யாத நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த புகாரில் ஜெய்பீம் திரைப்படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
வன்னியர்களை விமர்சித்ததாக வழக்கு
இந்த திரைப்படம் வன்னிய குல சத்திரியர்கள் எஸ்.டி சாதியினரை கொடுமைப்படுத்துவது போல் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் படத்தில் சாதி வெறுப்பை தூண்டும் வகையில் வன்னிய சங்க தலைவர்களின் பெயர்களில் கதாப்பாத்திரம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். வேண்டும்மென்று ஜாதிமத கலவரத்தை தூண்டும் வகையில் காட்சிகளை உருவாக்கிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மற்றும் கலை இயக்குனர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இரண்டு மாதமாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த 29 ஆம் தேதி நீதிபதி உத்தரவை ஒன்றை பிறப்பித்துள்ளார்.
சூர்யா, ஜோதிகா மீது வழக்கு பதிவு
அதில், புகார்தாரர் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளை விளக்கமாக தெரிவித்துள்ளார். எனவே தயாரிப்பாளர் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல், கலை இயக்குனர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் 5 நாட்களுக்குள் எப்.ஐ.ஆர் பதிவு செய்து நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வருகிற20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.