Asianet News TamilAsianet News Tamil

குமரி, மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்… எச்சரிக்கும் வானிலை மையம்!! | Tamilnadu Rain

#Tamilnadu Rain | விழுப்புரம் மாவட்டத்தில் 5 இடங்களில் அதி கனமழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். 

Chennai Meteorological Center about rain
Author
Chennai, First Published Nov 19, 2021, 2:01 PM IST

விழுப்புரம் மாவட்டத்தில் 5 இடங்களில் அதி கனமழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட இடங்களில் வானிலை மையம் கூறி இருந்ததை போல மிக கனமழை பெய்திருப்பதாக தெரிவித்தார். மேலும் வட தமிழகத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரங்களுக்கு மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என்றும் இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஈரோடு, சேலம், தருமபுரி, வேலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறிய புவியரசன், வட மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும் தென் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் நாளை நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

Chennai Meteorological Center about rain

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறிய அவர், அதிகபட்ச வெப்ப நிலை 30 டிகிரி செல்சியஸ். குறைந்த பட்ச வெப்ப நிலை 25 டிகிரி செல்சியசையொட்டி இருக்கும் என்றும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 5 இடங்களில் அதிகனமழையும் மிக கனமழை 37 இடங்களிலும் கனமழை 66 இடங்களிலும் பதிவாகியுள்ளதாக கூறிய அவர், அதிகபட்ச மழை அளவாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், கோலியனூர், வல்லம், வளவனூர் மற்றும் மணம்பூண்டி தலா 22 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்றும் புதுவையில் 19 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்றும் தெரிவித்தார்.

Chennai Meteorological Center about rain

விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், கோலியனூர், வல்லம், வளவனூர், மணம்பூண்டி ஆகிய 5 இடங்களில் அதி கனமழை பதிவாகியுள்ளதாக கூறிய அவர், காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் 35க்கும் அதிகமான இடங்களில் தலா 10 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளதாகவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரத்தில் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறும் என்றும் குறிப்பிட்டுள்ளார். குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் வட தமிழக கடலோரம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் இன்று மாலை வரை கடலுக்கு செல்ல வேணடாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios