இலங்கை மக்களுக்கு அனுப்பப்படும் அரிசியை தமிழக அரசு கொள்முதல் செய்ய தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இலங்கை மக்களுக்கு அனுப்பப்படும் அரிசியை தமிழக அரசு கொள்முதல் செய்ய தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அங்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தை எட்டியுள்ளது. இதை அடுத்து இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் அவர்கள் வழங்குவதற்காக 40,000 டன் அரிசியை கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அரிசி அதிக விலைக்கு வாங்கப்படுவதாக கூறி திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கை கிராமத்தை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் ஒரு கிலோ அரிசி ரூ.33.50 என்ற விலையின் அடிப்படையில் 40,000 டன் அரிசியை கொள்முதல் செய்ய தமிழக அரசு ரூ.134 கோடி ஒதுக்கி அரசாணை பிறப்பித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்திய உணவுக்கழகம் 1 கிலோ அரிசியை ரூ. 20க்கு விற்பனை செய்வதாகவும், அதில் இருந்து அரிசி கொள்முதல் செய்யும் பட்சத்தில் ரூ.54 கோடி மிச்சமாகும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பிய போது இந்திய உணவுகளாக அரிசி தரமற்றது எனவும், அரிசி கொள்முதல் செய்வது தொடர்பான தகவல் பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது என அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

எனவே அரசு கொள்முதலுக்கு ஒப்புதல் அளித்து பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்கவேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுவாமிநாதன், மற்றும் செந்தில் குமார் ராம மூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மத்திய அரசின் அனுமதியுடன் அரிசி அனுப்பப்படுவதாகவும், அவசர நிலை நேரங்களில் டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டத்திற்கு விலக்கு உள்ளதாகவும் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அரிசி கொள்முதலுக்கு தடை விதிக்க முடியாது என கூறி, வழக்கு விசாரணையை கோடை விடுமுறைக்கு பின் ஒத்திவைத்தனர்.