chennai HC continues ban for unverified land registration

வரைவு விதிகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்காத வரை அங்கீகரிக்கபடாத வீட்டு மனைகள் பத்திர பதிவு செய்ய தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக மாற்ற தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதிமகாதேவன் ஆகியோர் விளை நிலங்களை அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்யும் போது, அந்த நிலங்களை பத்திரப்பதிவு செய்ய கூடாது என்று பத்திரப்பதிவுத் துறைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஒரு அரசாணையை தாக்கல் செய்தார்.

இதையடுத்து பத்திரபதிவு தடைக்கு தளர்வு வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தளர்த்திய விதிமுறையை பயன்படுத்தி முறைகேடு நடப்பதாக மனுதாரர் குற்றசாட்டை முன்வைத்தார்.

தொடர்ந்து நிலம் வரையறை செய்ய 2 வாரத்திற்குள் திட்டம் கொண்டு வரப்படும் என அரசு வக்கீல் தெரிவித்தார்.

இதனால் மே 4 வரை பத்திர பதிவு தளர்வை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் ஏன் தடையை தளர்த்த வேண்டும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்த வழக்கு விசாரணையை மே 4 மற்றும் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.