chennai hc asks reservation is why not given to obc those are in poverty

பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள முன்னேறிய வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு ஏன் இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என, இன்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இட ஒதுக்கீடு குறித்து வந்த வழக்கின் விசாரணையில் உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு 69 சதவீத இடஒதுக்கீடு முறை பின்பற்றப் பட்டு வருகிறது. மீதமுள்ள 31 சதவீதத்தை பொதுப் பிரிவினருக்கு மட்டுமே ஒதுக்க வேண்டும் என்று கோரி ஹரி என்பவர் உள்ளிட்ட சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவாக தாக்கல் செய்தனர். 

இந்த மனு நீதிபதி கிருபாகரன் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இடஒதுக்கீட்டுப் பலனை அனுபவிக்கும் பிற பிரிவினரும், பொதுப்பிரிவில் போட்டியிடுவதால் சிறந்த கல்லூரிகளில் பொதுப் பிரிவினருக்கு இடம் கிடைப்பதில்லை என மனுதாரர்கள் தரப்பில் முறையிடப்பட்டது. 

இதனால் பொதுப்பிரிவில் உள்ள 31 சதவீதத்தில் பெரும்பாலான இடங்களும், இடஒதுக்கீட்டுப் பலனை அனுபவிக்கும் மற்ற பிரிவினருக்கே ஒதுக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. 

இந்த விவகாரத்தில், மனுதாரர் தரப்பு வாதத்தைக் கேட்ட நீதிபதி கிருபாகரன், பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை ஏன் வழங்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினார். 

இடஒதுக்கீடு மூலமாக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் அடைந்த முன்னேற்றம் தொடர்பாக அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.