சென்னையில் பயங்கரம் : கஞ்சா கோஷ்டிகள் மோதலில் வாலிபர் வெட்டிகொலை 2 பேர் படுகாயம் - போதை பொருள் மையமாகும் துரைப்பாக்கம் கண்ணகி நகர்
சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரில் கஞ்சா விற்பனை செய்வதில் இரண்டு கோஷ்டிகளிடையே நடந்த மோதலில் வாலிபர் ஒருவர் வெட்டிகொலை செய்யப்பட்டார். இரண்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது துரைப்பாக்கம் . இங்குள்ள கண்ணகி நகரில் குடிசைப்பகுதி மக்களுக்காக அரசு குடிசை மாற்று வாரியம் சார்பில் 20 ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்பட்டன.
சென்னையின் பல்வேறு பகுதி மக்களை மறு குடியமர்த்தல் திட்டத்தின் கீழ் சென்னை முழுதும் உள்ள குடிசைப்பகுதிகளில் உள்ள மக்களை இங்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டு வந்து குடியமர்த்தினர்.
பொதுவாக குடிசைப்பகுதிகளில் மக்களோடு மக்களாக மறைந்து வாழும் சமூக விரோதிகளும் ஒட்டுமொத்தமாக இங்கு குவிந்தனர். இதனால் சென்னையின் முக்கிய சமூக விரோத செயல்களின் இடமாக கண்ணகி நகர் மாறிப்போனது.
சென்னையில் அதிக அளவில் கஞ்சா , மாவா , கள்ளச்சாராயாம் அதிகம் விற்கப்படும் இடம் கண்ணகி நகரே. இங்கு சென்னையின் கஞ்சா விற்பனை வியாபாரிகள் 50 % உள்ளனர். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது இப்பகுதியில் வசிக்கும் உழைப்பாளி மக்களே.
சென்னையின் போதை பொருள் விற்பனை மையமாக மாறி வரும் கண்ணகி நகரில் குவிந்துள்ள போதை ஆசாமிகளால் ஆண்டு தோறும் அதிக அளவில் குற்றச்செயல்கள் இங்கு அதிக அளவில் நடக்கிறது.
கஞ்சா விற்பதில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் நேற்று இரண்டு பேர் வெட்டிகொலை செய்யப்பட்டனர். தீபாவளி நேரத்தில் அதிக அளவில் கஞ்சா விற்பனை செய்ய வேண்டும் என்ற போட்டியில் நேற்று கண்ணகி நகரில் இரண்டு கோஷ்டிகள் தங்களுக்குள் பயங்கர ஆயுதங்களுடம் மோதிக்கொண்டன.
இதில் சம்பவ இடத்திலேயே களியா (எ) ரஞ்சித்குமார் (வயது 20) வெட்டி படுகொலை செய்யப்பட்டான்.
செங்கோட்டையன்(20), சக்திவேல்(20) ஆகிய இருவரும் பலத்த வெட்டுக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த கொலை சம்ப்பவம் குறித்து கண்ணகி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெட்டிய கும்பல் தப்பி ஓடிவிட்டது. இந்த பகுதியில் போதைபொருள் விற்கும் கும்பல் , சமூக விரோதிகள் ஆதிக்கம் அதிகம் உள்ளது. ஆனால் போலீசார் கண்டுகொள்வதே இல்லை. அதைவிட மாமுல் வாங்குவதில்தான் குறிக்கோளாக உள்ளனர். கண்ணகி நகர் போலீசாரை கூண்டோடு மாற்றினால்தான் அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியும் என அப்பகுதி மக்கள் ஆவேசத்துடன் கூறினர்.