அடுக்குமாடி குடியிருப்பில் தீ - ஆட்சியர் நேரில் ஆய்வு
சென்னை வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து உரிய விசாரணை செய்யப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு சிவன்தெருகோயில் வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை 4.45 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்தில் முதல் தளத்தில் இருந்த 4 பேர் மூச்சித் திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தீ விபத்து எப்படி நேர்ந்தது?
அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளத்தில் உள்ள மின்சாரப் பெட்டியில் திடீரென மின்கசிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தீப்பொறி அங்கிருந்த இரு சக்கர வாகனம் ஒன்றில் தொற்றி மற்ற வாகனங்களுக்கும் பரவியுள்ளதாகத் தெரிகிறது.
4 பேர் உயிரிழப்பு
20 இருசக்கர வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததால் தரைத்தளம் முழுவதும் கரும்புகையால் சூழப்பட்டு பின்னர் அவை முதல் தளத்திற்கும் பரவியுள்ளது. நச்சுவாயுக்கள் நிறைந்த இக்கரும்புகையை சுவாசித்த நான்கு பேருக்கும் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
கீழ்கப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 5 பேருக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடுமையான மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட 5 பேரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை ஆட்சியர் நேரில் ஆய்வு
தீ விபத்து ஏற்பட்ட குடியிருப்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது பேசிய அவர், விபத்து குறித்து உயர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தடயவியல் சோதனை
மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா ? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்குமா ? என்பதை அறிய தடவியல்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். சம்பவம் நிகழ்ந்த குடியிருப்பு பகுதிக்கு நேரில் சென்றுள்ள காவல்துறை உயர் அதிகாரிகள் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.