என்ன கொடுமை சார்; ரசாயன ஊசிபோட்டு தர்பூசணியில் நிறம், சுவையை கூட்டுறாங்களாம்; வங்கி அதிகாரி புகார்…
கோயம்புத்தூர்
ரசாயன ஊசி போட்டு தர்ப்பூசணியின் நிறம் மற்றும் சுவையைக் கூட்டுவதாக உணவுப் பாதுகாப்புத் துறையிடம் புகார் அளித்துள்ளார் வங்கி அதிகாரி ஒருவர்.
கோயம்புத்தூர் சாயிபாபா காலனி பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஜெயராமன். இவர் “சிட்டிசன் வாய்ஸ்” என்ற அமைப்பின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த இரு நாள்களுக்கு முன்னர் என்.எஸ்.ஆர். சாலையில் உள்ளி பிரபல பல்பொருள் அங்காடியில் தர்ப்பூசணி வாங்கியுள்ளார். அறுக்காமல் வீட்டில் வைத்திருந்த அந்தப் பழத்தில் இருந்து நுரை வெளியேறியுள்ளது. அந்தப் பழத்தின் மேற்புறத்தைச் சுத்தம் செய்து பார்த்தபோது பழத்தில் இருந்த சிறிய செயற்கை நுண் துளையில் இருந்து நுரை வெளியேறி இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் அவர் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, அந்த தர்ப்பூசணிப் பழத்தை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, ஜெயராமன் கூறியது:
“தர்ப்பூசணியில் நிறம் மற்றும் சுவையைக் கூட்டுவதற்காக செயற்கையான முறையில் ரசாயன திரவத்தை ஊசி மூலமாக அதில் செலுத்துகின்றனர். இந்த ரசாயனம் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இதனால் வயிற்றுப்போக்கு, வாந்தி, அல்சர், புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
பொதுவாக கோடைக்காலங்களில் மக்கள் அதிக அளவில் தர்ப்பூசணி உண்பர். கடையில் வாங்கிச் சென்று சிறிது நேரத்தில் சாப்பிட்டு விடுவதால் அதில் உள்ள ரசாயனக் கலப்பு, பழத்தில் ஏற்படும் மாற்றம் குறித்து தெரியவராது.
எனவே, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் பழக்கடைகள், கிடங்குகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றுக் கேட்டுக் கொண்டார்.