chain snatching in chennai

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வழிப்பறி, திருட்டு, நகை பறிப்பு உள்ளிட்டவை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் பெண்கள் சாலையில் தனியாக நடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அம்பத்தூர் அருகே அயப்பாக்கத்தை சேர்ந்தவர் ரமேஷ். அதே பகுதியில் செல்போன் ரீசாஜ் செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சுமித்ரா (34). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கிறார். தினமும் சுமித்ரா காலையில் பள்ளியில் விடுவதும், மாலையில் வீட்டுக்கு அழைத்து செல்வதும் வழக்கம்

இந்நிலையில், நேற்று மாலை சுமித்ரா, தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்து சென்றார். அங்கிருந்து மகளுடன் ஜெஜெ நகர், திருவள்ளுவர் சாலையில் நடந்து சென்றார்.

அப்போது, அவருக்கு பின்னால் பைக்கில் வந்த மர்மநபர்கள், சுமித்ரா கழுத்தில் இருந்த 4 சவரன் நகையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

இதுகுறித்து சுமித்ரா, ஜெஜெ நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, பைக் ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில், சுமித்ரா தனது மகளுடன் நடந்து சென்றபோது, பைக் ஆசாமிகள் அவரது கழுத்தில் இருந்த நகையை பறித்து சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து, கேமராவில் பதிவான உருவத்தை வைத்து போலீசார் விசாரிக்கின்றனர்.