நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு - பட்டப்பகலில் துணிகரம் ; பைக் ஆசாமிகள் அட்டகாசம்
சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. சென்னை அடையாறு சர்தார் பட்டேல் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.
இன்று காலை வழக்கம்போல் ஜெயலட்சுமி வேலைக்கு புறப்பட்டார். மாநகர பஸ் மூலம் அடையாறு மத்திய கைலாஷ் அருகே வந்து இறங்கிய அவர், தனது அலுவலகத்துக்கு நடந்து சென்றார்.
அப்போது, அவரை பின் தொடர்ந்து பைக்கில் ஹெல்மெட் அணிந்து சென்ற 2 பேர், ஜெயலட்சுமியின் கழுத்தில் இருந்த 10 சவரன் நகையை, கண் இமைக்கும் நேரத்தில் பறித்து கொண்டு தப்பி சென்றனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த ஜெயலட்சுமி அலறி கூச்சலிட்டார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், பைக் ஆசாமிகளை விரட்டினர். ஆனால், கொள்ளையர்கள் மின்னல் வேகத்தில் தப்பி தலைமறைவாகிவிட்டனர்.
இதுகுறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில், ஜெயலட்சுமி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, பைக் ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் அதிக மக்கள் நடமாட்டமும், அதிக வாகனங்கள் செல்லும் அடையாறு, மத்திய கைலாஷ் பகுதியில் பெண்ணிடம், பைக் ஆசாமிகள் நகை பறித்து தப்பி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.