காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய, மாநில அரசுகள் கபட நாடகம் ஆடுகின்றன - ஜி.கே.வாசன்...
தூத்துக்குடி
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய, மாநில அரசுகள் கபட நாடகம் ஆடுகின்றன என்று த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
தூத்துக்குடி மாவட்ட தமிழ் மாநில காங்கிரசு சார்பில் முன்னாள் எம்.பி. கே.டி.கோசல்ராம் பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியில் நடைப்பெற்றது.
தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் விஜயசீலன் தலைமை வகித்தார். திருச்செந்தூர் வட்டார தலைவர் சுந்தரலிங்கம், ஆழ்வார்திருநகரி கிழக்கு வட்டார தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பங்கேற்று பேசிய அதன் தலைவர் ஜி.கே.வாசன், "முன்னாள் எம்.பி. கே.டி.கோசல்ராம் மக்கள் தொண்டாற்றுபவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருந்தவர். அவர் தனது தொகுதிக்காக மட்டும் அல்ல, தமிழகத்துக்காக உழைத்தவர். அவர் முயற்சியால்தான் மணிமுத்தாறு அணை வந்தது.
தமிழகத்தில் தற்போது பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. காவிரி மேலாண்மை, ஸ்டெர்லைட் ஆகிய பிரச்சனைகளை மத்திய, மாநில அரசுகள் தீர்த்து வைப்பதுபோல நாடகமாடுகிறது.
காவிரி பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்துவிட்டது. ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். அந்த ஆலையை மூடுவது குறித்து ஆய்வு செய்து மக்களுக்காக அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய, மாநில அரசுகள் கபட நாடகம் ஆடுகின்றன. இது தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். தமிழகத்தில் தற்போதைய பிரச்சனைகளுக்கு காரணம் ஆளும் கட்சியும், ஆண்ட கட்சிகளும்தான்.
தமிழகத்தில் இனி தனி ஆட்சி அமையாது. கூட்டணி ஆட்சி தான் அமையும். அந்த சூழ்நிலை வரும்போது த.மா.கா. தெளிவான கூட்டணியில் இருக்கும்" என்று அவர் பேசினார்.