குட்கா ஊழல் வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் உள்பட பலரது வீடுகளில் டெல்லி சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

குட்கா ஊழல் வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் உள்பட பலரது வீடுகளில் டெல்லி சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, செங்குன்றத்தில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்த குடோன் உரிமையாளர்கள், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி, கலால் துறை அதிகாரி உள்பட 5 பேரை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன் புழல் உதவி கமிஷனராக இருந்த மன்னர்மன்னன், மதுரைக்கு பணிமாறுதலாகி சென்றார். தற்போது அவரையும், சிபிஐ அதிகாரிகள் விசாரணை வளையத்துக்கு கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில், குட்கா பொருட்கள் கடத்தி வந்து குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவில் குடோன் அமைத்து பதுக்கி வைத்ததில், தொடர்பு இருப்பதாக கூறி, கடந்த 2014 முதல் 2016 வரை பணியாற்றிய செங்குன்றம் இன்ஸ்பெக்டராக சம்பத்திடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

தற்போது இன்ஸ்பெக்டர் சம்பத், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவலர் குடியிருப்பில் தங்கி, ‘சிப்காட்’ காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். ஆறுமுகநேரியில் உள்ள அவரது வீட்டில் நேற்று முன்தினம் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சம்பத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் சென்னை ராயபுரம் மேற்கு மாதா கோவில் தெருவில் உள்ள போலீஸ் குடியிருப்பில் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டை காலி செய்யாமல் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஆறுமுகநேரியில் விசாரணை நடத்திய அதிகாரிகள் சென்னையில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சென்னை சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் ராயபுரம் போலீஸ் குடியிருப்புக்கு சென்று, அந்த வீட்டை பூட்டி ‘சீல்’ வைத்தனர். இதற்கான நோட்டீசையும் வீட்டின் முன்பு ஓட்டினர். சென்னை செங்குன்றத்தில் சம்பத் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய போது, போலீஸ் நிலையத்தில் வழக்கில் சிக்கிய வாகனங்களை எடைக்கு போட முயன்ற குற்றச்சாட்டில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.