கொடநாடு கொலை வழக்கு..! ஜெயலலிதா கார் ஓட்டுநர் நேரில் ஆஜர்- சிபிசிஐடி ரகசிய விசாரணை
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் அய்யப்பனிடம் சிபிசிஐடி போலீசார் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொடநாடு கொலை வழக்கு
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக உதகை நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 300-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் மறைந்த அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் அய்யப்பனிடம் இன்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
விசாரணைக்கு ஆஜரான ஜெயலலிதா ஓட்டுநர்
சிபிசிஐடி விசாரணைக்காக இன்று காலை அய்யப்பன் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் அவர் ஆஜரானார். விசாரணைக்கு செல்லும் முன்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக 1991 முதல் 2021 வரை பணியில் இருந்ததாகவும் தெரிவித்தார். விபத்தில் உயிரிழந்த கனகராஜ் 2000ஆம் ஆண்டுக்கு பின்பு தான் வேலைக்கு வந்ததாகவும், அவர் பழக்க வழக்கம் சரியில்லை என்பதால் நீக்கி விட்டனர் எனவும் தெரிவித்தார். கொடநாட்டில் இது போன்ற சம்பவம் நடைபெறும் என எதிர்பார்க்க வில்லை என கூறிய அவர், சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
மீண்டும் விசாரணை ஏன்.?
ஏற்கனவே உதகையில் நடந்த விசாரணையில் ஆஜராகி இருப்பதாகவும், இரண்டாவது முறையாக இங்கு சிபிசிஐடி விசாரணைக்கு வந்து இருப்பதாகவும் கூறினார். கனகராஜின் அண்ணன் தனபால் குறித்து எதுவும் தெரியாது எனவும், இப்போது என்ன விசாரணை என தெரியாது எனவும் கடந்த முறை கனகராஜ் குறித்து விசாரணை மேற்கொண்டனர் எனவும் கூறினார். எனக்கு அரசியல் தொடர்பாக எதுவும் தெரியாது என தெரிவித்த அவர், தனிப்பட்ட முறையில் ஜெயலலிதாவின் ஒட்டுனர் எனவும் கொடநாட்டில் அவர் வரும்போதெல்லாம் அங்கு இருந்திருப்பதாகவும் அய்யப்பன் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
உதயநிதி வளர்ச்சியை பொறுக்க முடியாமல் கனிமொழியால் நடத்தப்பட்டது தான் மகளிர் மாநாடு- சீறும் அண்ணாமலை