கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த தடை கோரிய வழக்கு, திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த தடை கோரிய வழக்கு, திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை உயர் நீதிமன்றத்தில், திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், தாக்கல் செய்த மனுவில், கரோனா தொற்று மூன்றாவது அலை பரவல் காரணமாக கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் எனவும், இறுதி செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக ஜூன், ஜூலை மாதங்களில் நடத்தப்படும் எனவும் தமிழக உயர்கல்வித் துறை செயலாளர் கடந்த மாதம் 21-ம் தேதி அறிவித்திருந்தார்.

செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்துவதால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதுடன், கல்வி நிறுவனங்களின் நம்பகத்தன்மையும் பாதிக்கப்படும். எனவே ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடத்த தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

கொரோனா பாதிப்பு குறைந்து வருவதன் காரணமாக ஊரடங்கு கட்டுபாட்டிலிருந்து தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அளித்துள்ளது. இரவு ஊரடங்கு, முழு நேர ஊரடங்கு உள்ளிட்டவற்றை ரத்து செய்துள்ளது. அனைத்து பள்ளிகளும் நேற்று முதல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதே போல் அனைத்து தனியார் மற்றும் அரசு, பல்கலை கழகங்கள்,கல்லூரிகள், தொழில் பயிற்சி நிலையங்கள் போன்றவையும் நேற்று முதல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

ஆனால் முன்னர் அறிவிக்கப்பட்டது போல், இறுதி பருவ தேர்வை தவீர்த்து அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் கல்லூரி திறக்கப்பட்டாலும் ஆன்லைன் முறையிலே நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.