case against voters who get money from candidates
ஓட்டுக்கு பணம் வாங்கிய வாக்காளர்கள் மீது இந்திய தேர்தல் ஆணையம் வழக்கு தொடர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பணபட்டுவாடா காரணமாக கடந்த 9ஆம் தேதி தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதுகுறித்து தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது, ஓட்டுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுத்ததற்கான ஆதாரங்கள் சிக்கின.

இந்நிலையில், இதுகுறித்து தகுந்த ஆதாரங்கள் இருந்தும் இந்திய தேர்தல் ஆணையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை.
ஆர்.கே.நகரில் பணபட்டுவாடா செய்த டிடிவி தினகரன் மீதும், இதுகுறித்த அமைச்சர்கள் மீதும், ஓட்டுக்கு பணம் வாங்கிய வாக்காளர்கள் மீதும் இந்திய தேர்தல் ஆணையம் வழக்கு தொடர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், விசாரணையை வரும் ஜுலை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
