பிரபல கார் ரேஸ் வீரர் மனைவியுடன் பலி - சென்னை சாலையில் அதிவேகமாக சென்றதால் விபரீதம்
சர்வதேச கார்பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் சென்னையில் இன்று காலை நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு தேசிய அளவில் நடைபெற்ற கார் பந்தயப் போட்டியில் அறிமுகமானவர் அஸ்வின் சுந்தர். 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச போட்டிகளிலும் ஜொலிக்க ஆரம்பித்தவர். ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த இவருக்கு நிவேதிதா என்பவரை அண்மையில் திருமணம் செய்து கொண்டார்.
இதற்கிடையே நேற்று இரவு தம்பதிகள் லீ மெரிடியன் ஹோட்டலில் உணவருந்திவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பட்டினப்பாக்கம் அருகே வந்த போது தறிகெட்டு ஓடிய கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
சிறிது காரில் தீப்பற்றி மளமளவென எரியத் தொடங்கியது.
விபத்தின் போது காரின் கதவுகள் இயங்காததால், இருவராலும் வெளியே வரமுடிவில்லை. இதன் காரணமாக அஸ்வின் சுந்தர், அவரது மனைவி நிவேதிதா, ஆகிய இருவரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.
தகவலறிந்த மீட்பு படையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். கருகிய நிலையில் காணப்பட்ட இருவரது உடல்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
மதுபோதையில் காரை இயக்கியதால் விபத்து ஏற்பட்டதா?, அல்லது வேறு எதாவது காரணம் இருக்குமா? என்பதை அறிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.