அந்த போலீஸ்காரரை பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார் - ஜி.ராமகிருஷ்ணன் காட்டம்...
சிவகங்கை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சிவகங்கை மாவட்டச் செயலாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய காவலாளர்கள் மீது வழக்குப் பதிந்து பணி இடை நீக்கம் செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி சாலையோர கடைகளை அகற்ற காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அதுகுறித்து கேள்வி எழுப்பிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் கந்தசாமியை காவலாளர்கள் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று தாக்கியதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர். சம்பந்தப்பட்ட காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் காவல்துறையினரைக் கண்டித்து திருப்புவனத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.
இந்த கூட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஐயம்பாண்டி தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜெயராமன், சண்முகப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கலந்து கொண்ட மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் கந்தசாமி மீது காவலாளர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் கண்டனத்துக்குரியதாகும்.
தாக்குதல் நடத்திய சார்பு - ஆய்வாளர் திருமுருகன் மற்றும் காவலாளர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிந்து அவர்களை பணியிலிருந்து இடை நீக்கம் செய்ய வேண்டும்.
இக் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் போராட்டங்களை நடத்தும்" என்று அவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் மதிமுக மாவட்ட செயலாளர் புலவர் செவந்தியப்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் தங்கமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் திருமொழி,
சங்கு உதயகுமார், திமுக ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, நகர் செயலாளர் நாகூர்கனி, தமாகா பொறுப்பாளர் ராஜா உள்ளிட்ட பல்வேறு கட்சியியனரும் இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசினர்.