cancel the order which is giving unequal for marks

மதுரை

முதுகலை மருத்துவப் படிப்பில் சேர உதவி மருத்துவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் பாரபட்சம் காட்டும் அரசாணையை ரத்து செய்ய கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

மதுரையைச் சேர்ந்த சுசிபிரதீப் மற்றும் கன்னியா குமரி, நெல்லை, தஞ்சாவூரை சேர்ந்த சிலர், மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், "எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உதவி மருத்துவர்களாக பணிபுரிந்து வருகிறோம். 

முதுகலை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்துள்ளோம். அந்தப் படிப்புக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் சேரும்போது, நுழைவுத்தேர்வு அடிப்படையில் பெறும் மதிப்பெண்களுடன், சுகாதார நிலையங்களில் பணியாற்று வதற்காக கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும்.

அண்மையில் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி, நகர்ப்புறம், கிராமப்புறம், மலைப்பகுதி ஆகியவற்றில் ‘கடினமான பகுதிகள்’ எனப்படும் பகுதிகளை கண்டறிவதிலும், அவற்றுக்கு வழங்கப்படும் ஊக்க மதிப்பெண்களிலும் பெரும் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது.

மேற்கண்ட பகுதிகள் அனைத்திலும் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான வேலையை தான் செய்கிறோம். 

அவ்வாறு இருக்கும்பட்சத்தில் எங்களுக்கான மதிப்பெண்கள் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவது ஏற்புடையதல்ல. எனவே இதுதொடர்பான அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், "இதுகுறித்து தமிழக அரசின் முதன்மை செயலாளர், இந்திய மெடிக்கல் கவுன்சில், மருத்துவக்கல்வி இயக்கக அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்" என்று நீதிபதி உத்தரவிட்டார். 

பின்னர் இந்த வழக்கை வருகிற 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.