Cancel the NEET exam - The slogans of students in Kanyakumari

கன்னியாகுமரி

ரத்து செய்!, ரத்து செய்1 ‘நீட்’ தேர்வை ரத்து செய்! என்று அறிஞர் அண்ணா கலை கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி உள்ளது. இங்கு 1300 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று வழக்கம் போல் மாணவர்கள் கல்லூரிக்கு வந்தனர்.

காலை பத்து மணியளவில் வகுப்புகள் தொடங்கும் வேளையில் திடீரென்று மாணவ, மாணவிகள் அனைவரும் ஒன்றாக வகுப்புகளைப் புறக்கணித்தனர். 

பின்னர் அவர்கள் அனைவரும் கல்லூரி வளாகத்தில் ஒன்று கூடினர். அவர்கள் ‘நீட்’ தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய கோரியும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், அனிதாவின் சாவுக்கு காரணமான மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், “ரத்து செய், ரத்து செய் ‘நீட்’ தேர்வை ரத்து செய், நியாயம் வழங்கு நியாயம் வழங்கு அனிதாவின் மரணத்திற்கு நியாயம் வழங்கு’’ போன்ற முழக்கங்களை எழுப்பினர்.

இந்தப் போராட்டம் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீடித்தது. பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து கல்லூரியை விட்டு வெளியேறினர்.