cancel tax for diesel government transport will get a lot of profit

சேலம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஆண்டுக்கு 65 ஆயிரம் கோடி லிட்டர் டீசல் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு வரிவிலக்கு வழங்கினால் பெரும் தொகை போக்குவரத்துக் கழகத்துக்கு லாபமாக கிடைக்கும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஏஐடியுசி தொழிற்சங்க பொதுச் செயலர் இலட்சுமணன் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஏஐடியுசி தொழிற்சங்க பொதுச் செயலர் இலட்சுமணன் நேற்று சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:

"தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் மண்டல நிர்வாக இயக்குநர் பாண்டி, கோவை மண்டலத்தின் பொறுப்பு அதிகாரியாக இருந்து வருகிறார்.

கொங்கு மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் அதிக வருவாய் கிடைக்கக் கூடிய சுமார் 100 வழித் தடங்களை அமைச்சர்கள், அதிகாரிகளின் பினாமி நிறுவனங்களான தனியார் பேருந்து நிறுவனங்களுக்கு வழங்கி அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளார்.

இதன் காரணமாக, அரசு போக்குவரத்துக் கழகங்கள் நட்டத்தில் இயங்கி வருகின்றன. அரசிடம் ஊதியம் வாங்கிவரும் போக்குவரத்து அலுவலர்கள் லாபம் மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ள தனியாருக்குதான் சேவை செய்து வருகின்றனர். எனவே, சேலம் மண்டல நிர்வாக இயக்குநர் பாண்டியைக் கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஆண்டுக்கு 65 ஆயிரம் கோடி லிட்டர் டீசல் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு வரிவிலக்கு வழங்கினால், பெரும் தொகை போக்குவரத்துக் கழகத்துக்கு லாபமாக கிடைக்கும்.

மேலும், ரூ.900 கோடி சுங்கச் சாவடிக்காக செலுத்தப்படுகிறது. இதற்கும் மத்திய அரசு சலுகை வழங்கினால், போக்குவரத்துத் துறை லாபத்தில் இயங்கும்" என்று அவர் தெரிவித்தார்.