குளித்தலை,
அலங்காநல்லூரில் கைது செய்யபட்ட ஆதரவாளர்களை விடுவிக்கக் கோரி, கையில் கருப்புக் கோடி ஏந்தி சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குளித்தலை அருகே உள்ள, கணக்கப்பிள்ளையூர் சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் நேற்று கையில் கருப்பு கொடியேந்தி திடீரென ஐயர்மலை- பனிக்கம்பட்டி செல்லும் சாலையில் கணக்கப்பிள்ளையூர் வாய்க்கால் பாலத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து அலங்காநல்லூரில் போரட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும். சல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும். பீட்டாவை இந்தியாவில் தடைசெய்ய வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை காவல் ஆய்வாளர் குருநாதன் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுவிட்டதாக காவலாளர்கள் தெரிவித்தனர்.
பின்னர், இளைஞர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் ஐயர்மலை - பனிக்கம்பட்டி சாலையில் போக்குவரத்து பாதித்தது.
