சல்லிக்கட்டுக்கு நடத்த வேண்டும் என்று ஊட்டியில் தனியார் கல்லூரி மாணவர்களும், அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் வெவ்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்ததை தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக சல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், பதவியில் இருப்பவர்களும் இந்தாண்டு சல்லிக்கட்டு நடத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். ஆனால், கடைசி நேரத்தில் கைவிரித்தனர். இதனால் தமிழக மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில் சல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவ - மாணவிகள் போராட்டத்தில் இறங்கினர். இதனால் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது.
சில இடங்களில் மட்டுமே ஆர்ப்பாட்டமாய் தொடங்கி தற்போது போராட்டம் என வலுப்பெற்று தமிழகம் முழுவதும் விரிந்தது.
ஊட்டி அருகே உள்ள கேத்தி தனியார் கல்லூரி மாணவர்களும் சல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து நேற்று காலை 9 மணி முதலே கல்லூரி மாணவ - மாணவிகள் வரத் தொடங்கினர்.
காலை 10 மணிக்கு ஏராளமான மாணவர்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் பீட்டா அமைப்பு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு முழக்கங்களை எழுப்பினார்கள்.
இதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் ஜான் ஓரல் பாஸ்கர், காவல் உதவி ஆய்வாளர் மகேஷ் உள்ளிட்டோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், சமாதானம் அடைந்த மாணவர்கள் தங்களது வகுப்புகளுக்கு திரும்பினர்.
இதேபோன்று கோத்தகிரி மக்கள் கூட்டமைப்பு சார்பில் பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரி கோத்தகிரி சந்தைத் திடலில் நேற்று போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் தி.மு.க. பா.ம.க. தே.மு.தி.க. விடுதலை சிறுத்தைகள், தமிழ் விடுதலைப் புலிகள் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டம் குறித்து கோத்தகிரி மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது
“சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கோத்தகிரியில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணவர்களை காவலாளர்கள் கைது செய்துள்ளனர். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பீட்டா அமைப்பை இந்தியாவில் தடை செய்ய வேண்டும்” என்று கூறினார்.
