ஓகே சொன்ன உச்ச நீதிமன்றம்... 800 ‘டாஸ்மாக்’ கடைகளைத் திறக்க ஆயத்தமாகும் அதிமுக., அரசு...!
நெடுஞ்சாலையின் ஓரமாக உள்ள டாஸ்மாக் கடைகள் விவகாரத்தில், ஊரகப் பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளை ஊரகச் சாலைகளாக மாற்றி டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழ்நாடு அரசு முயன்று வருவதாக வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று ஊரகப் பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனால் தமிழக அரசு உற்சாகம் அடைந்துள்ளது. தாங்கள் முன்வைத்த வாதமும் நியாயமும் உச்ச நீதிமன்றம் புரிந்து கொண்டு அனுமதி வழங்கியதாக தமிழக அரசு அதிகாரிகள் கூறி வருகின்றனர்.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஊரகச் சாலைகளாக மாற்றி டாஸ்மாக் கடைகளை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து, அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில், மாவட்ட ஆட்சியர்கள் தகுதியான இடங்களைத் தேர்வு செய்து மதுக்கடைகளைத் திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த உத்தரவைத் தொடர்ந்து தமிழகத்தில் 800 டாஸ்மாக் கடைகள் வரை திறக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.