bsnl Pongal Gifts - Three stunned Offers

வேலூர்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பொங்கல் பண்டிகையையொட்டி வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கிய தொலைதொடர்பு மாவட்டத்திற்கான மூன்று அட்டகாசமான புதிய ஆஃபர்களை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து வேலூரில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பி.எஸ்.என்.எல். மாவட்ட முதன்மை பொது மேலாளர் கே.வெங்கட்ராமன் கூறியது:

"கடந்தாண்டு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள எல்எல்-49 (தரைவழி தொடர்பு), பிபி-249 (பிராட்பேண்ட்) ஆகிய திட்டங்கள் மார்ச் 31-ஆம் தேதி வரை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மேலும், பொங்கல் பண்டிகையையொட்டி எஸ்டிவி-129, எஸ்டிவி-123, எஸ்டிவி-187 ஆகிய புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

இதில், எஸ்டிவி-129 திட்டத்தில் 28 நாள்களுக்கு அனைத்து நெட்வொர்களுக்கும் இலவசமாக பேசிக் கொள்ள முடிவதுடன், 500 ஜிபி டேட்டா, 1000 எஸ்.எம்.எஸ். வசதியும் அளிக்கப்படுகிறது.

எஸ்டிவி-123 திட்டத்தில் தமிழகம் முழுவதும் தினசரி 2345 விநாடிகள் இலவசமாக பேசிக் கொள்ளலாம். இச்சலுகை 28 நாள்களுக்கு வழங்கப்படுகிறது.

எஸ்டிவி-187 திட்டத்தில் 28 நாள்களுக்கு அளவற்ற வாய்ஸ் கால்கள் ரோமிங் வசதியுடன் அளிக்கப்படுவதுடன், 5 ஜிபி டேட்டா, 1000 எஸ்.எம்.எஸ் ஆகியவையும் இலவசமாக வழங்கப்படும்.

அதுதவிர, இலவச இரவு நேர அழைப்புகளுக்கான நேரம் இரவு 10.30 முதல் காலை 6 மணி வரை எனவும் மாற்றப்பட்டிருப்பதுடன், ஞாயிற்றுக்கிழமை முழுவதும் இலவசமாக பேசுவது தொடர்ந்து அளிக்கப்படுகிறது.

மொபைல் பூஸ்டர்களான எஸ்டிவி-7, எஸ்டிவி-19 திட்டங்களை பயன்படுத்தி பி.எஸ்.என்.எல். நெட்வொர்க் அழைப்புகளை 15 பைசாவிலும், மற்ற நெட்வொர்க் அழைப்புகளை 35 பைசாவிலும் முறையே 28 நாள்கள், 84 நாள்கள் பேசிக் கொள்ள முடியும்.

புதியதாக கொடுக்கப்படும் தரைவழி, பிராட்பேண்ட், எஃப்டிடிஎச் சேவைகளுக்கான நிர்மாணக் கட்டணம் முழுமையாக இலவசமாக்கப்பட்டு மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை விரிவுபடுத்தும் விதமாக வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ரூ.2 கோடி செலவில் பி.எஸ்.என்.எல். மின்திட்டங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

மேலும், பழைய ஃபைபர் தொழில்நுட்பங்களுக்கு மாற்றாக ரூ. 65 இலட்சம் செலவில் புதிய சி-பேன் தொழில் நுட்பங்கள் 93 இடங்களில் நிறுவப்படுகின்றன.

மொத்தமுள்ள 453 தொலைதொடர்பு கோபுரங்களில் ஏற்கெனவே 194 கோபுரங்கள் 3 ஜி-ஆக மாற்றப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, 149 கோபுரங்கள் 3 ஜி-ஆக மாற்றப்படுகின்றன. மார்ச் 31-ஆம் தேதிக்குள் இப்பணிகளும் முடிக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.