அண்ணன் மகள் காதலித்தது பிடிக்காததால் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சித்தப்பா; மரியாதை தராததால் வெறிச்செயல்...
கரூர்
கரூரில், அண்ணன் மகளை காதலை விட சொல்லி கூறியும் தனக்கு மரியாதை கொடுக்காமல் காதலை தொடர்ந்ததால் அவரது சித்தப்பா பெட்ரோல் ஊற்றி கொளுத்தி உள்ளார்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகள் நந்தினி (19).
இவர் திண்டுக்கல் மாவட்டம், காக்காதோப்பு பகுதியைச் சேர்ந்த தனது சித்தப்பா ராஜூ (58) வீட்டில் தங்கி, அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
அப்போது உறவினரான வெள்ளமரத்துப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவருடன் நந்தினிக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. அப்போது நந்தினியிடம் உங்கள் வீட்டுக்கு முறைப்படி வந்து பெண் கேட்டு திருமணம் செய்து கொள்கிறேன் என்று ரமேஷ் கூறியுள்ளார்.
இதனிடையில் இந்த காதல் விவகாரம் ராஜூக்கு தெரியவந்தது. இதனையடுத்து அவர் நந்தினியை கண்டித்துள்ளார். ஆனால், நந்தினி தனது காதலையும், காதலனையும் விட்டுக் கொடுக்கவில்லை.
இந்த நிலையில் ராஜூ மற்றும் அவரது மனைவி சரசு ஆகியோருடன் புறப்பட்டு தனது சொந்த ஊரில் நடைபெறும் கோயில் திருவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நந்தினி வந்தார். அப்போது தனது காதல் விவகாரம் குறித்து பெற்றோருக்கு அவர் தெரிவித்தார். இதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து நேற்று பெண் பார்க்கும் நிகழ்ச்சி நடப்பதாக இருந்த நிலையில், தான் எவ்வளவு புத்திமதி கூறியும் அதற்கு நந்தினி தனகு மரியாதை கொடுக்கவில்லையே? தனது சொல்லுக்கு செவி சாய்க்க மறுத்துவிட்டாரே? என்று சித்தப்பா ராஜூவுக்கு கோபம் ஏற்பட்டது. மேலும் நந்தினியை கொலை செய்ய அவர் திட்டமிட்டார்.
இதற்காக வீட்டின் அருகே அவரை வர சொன்னார். நந்தினி அங்கு வந்ததும், ராஜூ தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீ வைத்தார். இதனால் உடல் முழுவதும் தீ மளமளவென பரவியதால் வலிதாங்க முடியாமல் அவர் துடித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ராஜூவின் மீதும் தீப்பற்றியதால் அவர் காயமடைந்தார்.
இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஓடிவந்து நந்தினி மற்றும் ராஜூவை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதில் மருத்துவர்கள் பரிந்துரையின்பேரில் நந்தினி மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிது.
ராஜூவுக்கு குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ராஜூ மீது கொலை முயற்சி வழக்குப்பதிந்து குளித்தலை காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.