அடுக்குமாடி குடியிருப்பில் பூட்டை உடைத்து திருட்டு; 20 சவரன் நகைகள் கொள்ளை; போலீஸ் விசாரணை...
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளின் பூட்டை உடைத்து 20 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், கண்டிகையை அடுத்துள்ளது நல்லம்பாக்கம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 600–க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்குள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த ஹரிஹரசுதன், இராதாகிருஷ்ணன், சுசீந்திரன், பாகம் பிரியாள் ஆகியோர் தங்கள் வீடுகளை பூட்டி விட்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர்.
நேற்று மாலை அவர்களுடைய வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து வீடுகளின் உரிமையாளர்களான ஹரிஹரசுதன், இராதாகிருஷ்ணன், சுசீந்திரன், பாகம் பிரியாள் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர், இதுகுறித்து தாழம்பூர் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்பேரில் காவலாளர்களின் முதற்கட்ட விசாரணைத் தொடங்கியது. அந்த விசாரணயில், அவர்களுடைய வீட்டில் இருந்து மொத்தம் 20 சவரன் நகைகள் திருடப்பட்டிருப்பது தெரிந்துள்ளது.
வீடுகளின் உரிமையாளர்கள் வந்த பின்னரே எவ்வளவு நகை திருடப்பட்டுள்ளது என்பது தெரியவரும் என்றும், தொடர்ந்து விசாரணை நடைப்பெற்று வருகின்றது என்றும் காவலாளார்கள் தெரிவித்தனர்.