திறந்த ஆறு மாதத்திற்குள் சேதமடைந்த மேம்பாலம்; திறக்கவே புரட்சி செய்த மக்கள் சீரமைக்க செய்யமாட்டார்களா?
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு - ஒரகாட்டுபேட்டை இடையே கட்டப்பட்ட மேம்பாலம் திறந்த ஆறு மாதத்திற்குள் சேதமடைந்ததால் அதனை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு, ஒரகாட்டுபேட்டை, சீமாவரம் வழியாக பாயும் பாலாறு பாலாற்றை கடந்துச் செல்ல செங்கல்பட்டு - ஒரகாட்டுபேட்டை இடையே மேம்பாலம் கட்டப்பட்டது.
இந்த மேம்பாலம் கட்டி முடித்தும் திறக்கப்படாமல் இருந்தது. இதனால், ஆவேசமடைந்த மக்களே மேம்பாலத்தை திறந்து வைத்து புரட்சி செய்தனர். இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. எம்.பி. மரகதம் குமரவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்று மக்கள் திறந்த மேம்பாலத்தை மீண்டும் திறந்து வைத்து கிழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல வீராப்பாய் திரிந்தனர்.
இந்த மேம்பாலம் திறக்கப்பட்டு ஆறு மாதத்திலேயே பல இடங்களில் சேதம் அடைந்து காணப்படுகிறது. மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படாததால் இரவில் மேம்பாலத்தை கடந்துச் செல்லக் கூடியவர்கள் அவதிக்குள்ளகி வருகின்றனர். இதனால், அடிக்கடி இந்தப் பகுதியில் விபத்துகள் ஏற்படுகிறது.
இதுமட்டுமின்றி இந்த மேம்பாலம் குடிகாரர்கள் கூடி குடிப்பதற்கும், கும்மாளம் அடிப்பதற்கும் ஏற்ற இடமாக மாறி வருகின்றது.
எனவே, இந்த மேம்பாலத்தில் விரைவில் மின் விளக்குகளை அமைத்தும், குண்டும் குழியுமாக உள்ள மேம்பாலத்தை சீரமைத்து தரவேண்டும் என்றும், குடிகாரர்கள் கூடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.