ரமலானில் இந்துக்களும், இந்து பண்டிகையில் இசுலாமியர்களும் கலந்து கொள்ள வேண்டும் - அபுபக்கர்
ரமலான் பண்டிகையை இந்துக்களுடனும், இந்துக்களின் பண்டிகையை இஸ்லாமியர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று இந்திய ஹஜ் கமிட்டி துணைத் தலைவர் அபுபக்கர் கூறியுள்ளார்.
சென்னை, மயிலாப்பூரில், அபுபக்கர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் ஹஜ் பயணமாக ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் சென்று வருகின்றனர். தமிழகத்தில் இருந்து மட்டும் 3,189 பேர் சென்று வருகின்றனர்.
இந்தியாவில் இருந்து அதிகளவில் ஹஜ் பயணம் மேற்கொள்ள அரபு அரசு 20 சதவீதம் அதிகப்படுத்தி அனுமதி வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் இருந்து 4 ஆயிரத்து 200 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியும்.
இதனை மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதிமுக கடந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் 3.5 சதவீதம் இசுலாமியர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தனர்.
ஆனால், இதுவரை தமிழக அரசு இதனை நிறைவேற்றவில்லை. எனவே அதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ரமலான் பண்டிகையில் இந்துக்களும், இந்துக்கள் பண்டிகைகளில் இசுலாமியர்களும் கலந்து கொள்ள வேண்டும்.
இதனை இன்றைய இளைய சமுதாயத்தினர் முன்னெடுத்து சென்றால் உலக அளவில் மத்திய அரசு கூறியதைப்போல் பொருளாதாரத்தில் இந்தியா வளர்ச்சி பெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.