வட்டி பணம் கேட்டு மிரட்டல்... போத்ராவின் மகன்கள் கைது...
கந்துவட்டி கேட்டு மிரட்டியதை அடுத்து பிரபல சினிமா பைனான்சியர் போத்ரா மற்றும் அவரது மகன்கள் ககன் போத்ரா, சந்தீப் போத்ரா ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரபல சினிமா பைனான்சியர் எஸ்.முகுந்சந்த் போத்ரா. இவர், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கஸ்தூரி ராஜா மீது புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
இதையடுத்து போத்ரா, தன்னை மிரட்டுவதாக நடிகர் ரஜினிகாந்த் புகார் கூறியிருந்தார். பைனான்சியர் போத்ரா மீது மிரட்டி பணம் பறித்த புகாரில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் சதீஷ்குமார், பைனான்சியர் போத்ராவிடம் பணம் வாங்கியுள்ளார். அந்த பணத்தை போத்ராவிடம் திருப்பி செலுத்தியதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து, போத்ரா மற்றும் அவரது மகன் ககன் பணம் கேட்டு மிரட்டி வருவதாக சதீஷ்குமார் புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார், போத்ராவை இன்று கைது செய்தது. கைது செய்யப்பட்ட போத்ரா மற்றும்
அவரது மகன் ககன் போத்ராவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஓட்டல் உரிமையாளர் செந்தில் கணபதி என்பவர், போத்ராவின் மகன்கள் மீது புகார் அளித்துள்ளார் அந்த புகாரில் தான் ரூ.1.40 கோடி, போத்ராவிடம் வாங்கியதாகவும், இதுவரை 2 கோடி ரூபாய் வரை செலுத்தி உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் பணம்
கேட்டு போத்ராவின் மகன்கள் தம்மை மிரட்டுவதாகவும் அந்த புகார் செந்தில் கணபதி கூறியிருந்தார். தந்தை போத்ராவிடம் கடன் வாங்கியவர்களிடம் ககன் மற்றும் சந்தீப் ஆகியோர் மிரட்டி பணம் வசூலித்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, போத்ராவின் மகன்கள் ககன் போத்ரா, சந்தீப்போத்ராவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். போத்ரா, ககன் போத்ரா, சந்தீப் போத்ரா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.