அதிகாரிகளின் மெத்தனப்போக்கை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடியேற்றி போராட்டம்... 5-வது நாளாக நீடிப்பு...
நாகப்பட்டினம்
தெருவில் சாலை அமைக்காததை கண்டித்தும், நகராட்சி அதிகாரிகளின் மெத்தனப்போக்கை கண்டித்தும் நாகப்பட்டினத்தில் மக்கள் தங்களது வீடுகளில் 5-வது நாளாக கருப்புக்கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரில் நாகை நகராட்சிக்குட்பட்ட 7-வது வார்டில் சியா மரைக்காயர் தெரு உள்ளது. இந்த பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்தப் பகுதியில் உள்ள சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த வழியாகத்தான் பள்ளி மாணவ - மாணவிகள் சைக்கிள்களில் சென்று வருகின்றனர். அவ்வாறு செல்லும்போது சாலையில் உள்ள பள்ளங்களில் விழுந்து விபத்து ஏற்படுகிறது.
மேலும், இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்படுவதாகவும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதனால், இந்த பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி நாகை நகராட்சி அதிகாரியிடம் மக்கள் பலமுறை மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் நாகை 7-வது வார்டு சியாமரைக்காயர் தெருவில் சாலை அமைக்காததை கண்டித்தும், நகராட்சி அதிகாரிகளின் மெத்தனப்போக்கை கண்டித்தும் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கடந்த 23-ஆம் தேதி முதல் தங்களது வீடுகளில் கருப்புக் கொடிகளை ஏற்றி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டம் நேற்று 5-வது நாளாகவும் நீடித்தது. அதன்படி, சியாமரைக்காயர் தெரு மக்கள் தங்களது வீடுகளில் கருப்புக்கொடிகளை ஏற்றினர்.