Black days in lawyer lives Neglect of court proceedings at Perambalur
பெரம்பலூர்
கடந்த 2009-ஆம் ஆண்டில் வழக்குரைஞர்கள் மீது காவலாளர்கள் நடத்திய தாக்குதலை கறுப்பு நாளாக அனுசரித்து பெரம்பலூரில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
கடந்த 2009-ஆம் ஆண்டு பிப்ரவி 19-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் தமிழக காவல்துறை அத்துமீறி நுழைந்து வழக்குரைஞர்கள், மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் பலர் பலத்த காயமடைந்தனர்.
நீதிமன்றப் பொருள்கள், நீதிமன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் ஆகியவற்றை சேதப்படுத்தினர். அதனோடு நீதிபதிகளையும் தாக்கினர். எனவே, அந்த நாளை வழக்குரைஞர்கள் ஆண்டுதோறும் கருப்பு நாளாக அனுசரித்து வருகின்றனர்.
அதன்படி, நேற்று பெரம்பலூரில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட பார் அசோசியேசன் தலைவர் இ.வள்ளுவன் நம்பி, பெரம்பலூர் மாவட்ட அட்வகேட் அசோசியேசன் தலைவர் சுந்தர்ராஜன் ஆகியோர் தலைமைத் தாங்கினர்.
இந்த கருப்பு நாள் அனுசரிப்பில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்தனர். இதனால், பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிமன்றப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
