தமிழர் பிரதமர்: அமித் ஷா கருத்தை மறுத்த அண்ணாமலை!
தமிழர் பிரதமராக வேண்டும் என்ற அமித் ஷாவின் கருத்தை அண்ணாமலை மறுத்துள்ளார்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக ஆட்சியின் 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டங்களை மே 30ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை நாடு முழுவதும் அக்கட்சி நடத்தி வருகிறது. அந்த வகையில், வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் நேற்று நடந்த சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.
முன்னதாக, டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அமித் ஷா, கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில், தமிழகத்தின் பல்வேறு துறைகளை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் சந்தித்தனர். அதன் தொடர்ச்சியாக, சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், தென் சென்னை மக்களவைத் தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் அமித் ஷா கலந்துரையாடினார். அதில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அந்தக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, “மத்திய அரசின் ஒன்பது ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் பாஜக நிர்வாகிகள் கொண்டு சேர்க்க வேண்டும். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் 60 சதவீதம் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. எஞ்சி இருக்கக்கூடிய பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 25 இடங்கள் வெற்றிக்கான இலக்காக வைத்து அனைத்து தொகுதியிலும் பூத் கமிட்டியை வலுப்படுத்த வேண்டும்.” என்று வலியுறுத்தினார்.
பாஜக கேட்கும் தொகுதிகள்... என்ன காரணம்? விட்டுக் கொடுக்குமா அதிமுக?
மேலும், தமிழ்நாட்டில் இருந்து 2 பிரதமர்களை கடந்த காலங்களில் தவறவிட்டுள்ளோம். அதற்கு காரணம் திமுகதான். வரும் காலங்களில் ஒரு தமிழரையாவது பிரதமராக்க உறுதி எடுப்போம் என்றும் அமித் ஷா பேசியதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், எதிர்காலத்தில் தமிழர் ஒருவர் பிரதமராக வேண்டும் என்ற அமித் ஷாவின் கருத்தை அண்ணாமலை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எதிர்காலத்தில் தமிழர் பிரதமராவார்' என்ற அமித் ஷாவின் கருத்து ஊடகங்களில் வெளியாகியுள்ளது. கட்சித் தொண்டர்களுடனான கூட்டத்தில் அமித ஷாவின் கூற்று ஊடகங்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அனைவருக்கும் அவர்களுக்கான உரிமை இருக்கிறது. கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றே அமித் ஷா கூறினார். தொண்டர்களை ஊக்குவிக்கும் விதமாகவே அவர் பேசினார் என்று தெரிவித்துள்ளார்.