Bipin Rawat: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து வீடியோ- படமெடுத்த நபரின் செல்போன் ஆய்வு
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தை கடைசியாக பார்த்து, அதனை படம் பிடித்த நபரின் செல்போனை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அதனை கோவை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 8 ஆம் தேதி வெலிங்கடன் பயிற்சி மையம் அருகில் காட்டேரி எனும் அடர்ந்த காட்டு பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் அதில் பயணித்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 இராணுவ வீரர்கள் என மொத்த 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிர் பிழைத்த ஒரே நபரான குருப் கேப்டன் வருண் சிங் 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்டார். தற்போது பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடும் பனிமூட்டம் காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பான தீவிர விசாரணையில் இந்தியா விமானப்படை ஈடுபட்டுள்ளது. ஏர்மார்ஷல் மன்வேந்திரசிங் தலைமையிலான விசாரணை குழுவினர் அந்த பகுதியில் முகாமிட்டு விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தமிழக போலீசாரும் இந்த விபத்து குறித்து வழக்குபதிந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி முத்து மாணிக்கம் நியமிக்கபட்டுள்ளார்.
விபத்து நடப்பதற்கு முன்பு அந்த ஹெலிகாப்டர் வானில் பறப்பதும், சிறிது நேரத்தில் கீழே விழுவது போன்ற சத்தத்துடன் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. ஹெலிகாப்டர் விபத்தில் இந்த வீடியோ முக்கிய ஆதாரமாக கருதப்படும் நிலையில், தற்போது அந்த வீடியோ அடங்கிய செல்போனை கோவை தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் விபத்து நடத்த இடத்தில் உயர் மின்னழுத்த கம்பிகள், மின் கம்பங்கள் ஏதேனும் இருந்ததா? என மின் வாரியத்திடம் காவல் துறையினர் விளக்கம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சம்பவ தினத்தன்று நிலவிய வானிலை தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையத்திடம் தகவல் கேட்டு கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து பலதரப்பட்ட சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே விபத்து தொடர்பாக விமானபடை உயர் அதிகாரி தலைமையில் 4 வது நாளாக இன்று தீவர விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. விபத்து நிகழ்ந்த நஞ்சப்ப சத்திரம் பகுதியில் வெளிநபர்கள் நுழைய கட்டுபாடுகள் விதிக்கபட்டு, ஹெலிகாப்டரின் பாகங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்றன."