காதலியுடன் மஜாவாக ஊர் சுற்ற பைக்-ஐ ஆட்டயப்போட்ட இளைஞர்! பொறிவைத்து பிடித்த போலீஸ்!
காதலியுடன் ஊர் சுற்றுவதற்காக பைக்குகளை திருடிய இளைஞர் ஒருவரை போலீசார் பொறிவைத்து பிடித்த சம்பவம் கன்னியாகுமரியில் நடந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், ஆரல்வாய்மொழி பகுதிகளில் கடந்த சில நாட்களாக பைக்குகள் காணாமல்போயுள்ளன. பைக்கின் உரிமையாளர்கள் இது தொடர்பாக போலீசிடம் புகார் அளித்து வந்தனர். இதுபோன்ற புகார்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்துள்ளன. இதனை அடுத்து, எஸ்.பி. துரை உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, பைக் திருடர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், வடசேரி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கருத்தப்பாண்டி என்ற கார்த்திக் என்பவரை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், அவரை வடசேரி காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நெல்லை மாவட்டம், வீரவநல்லூரை அடுத்த வெங்ளாங்குழி பகுதியைச் சேர்ந்தவன் என்றும், பைக்குகள் திருட்டில் ஈடுபட்டது உண்மை என்றும் கூறியுள்ளார். மேலும், பைக் காணாமல்போன இடங்களில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஒப்பிட்டுப் பார்த்ததில், அதில் பதிவாகியிருந்த வாலிபர் கார்த்திக் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கருத்தப்பாண்டியை போலீசார்
கைது செய்தனர்.
கருத்தப்பாண்டி கொடுத்த தகவலின்படி, 21 பைக்குகளை போலீசார் மீட்டனர். கருத்தபாண்டியிடம் தொடர் விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியே வரத் துவங்கின. நாகர்கோவில் ஆரல்வாய்மொழி உள்ளிட்ட பகுதிகளில் திருடப்படும் பைக்குகள், வாகன கன்சல்டிங் நிறுவனத்துக்கு விற்று விடுவார்கள் என்று தெரியவந்தது. மேலும், பைக் திருட்டுகளில் கருத்தபாண்டி, தன்னுடன் மேலும் 3 பேரை இணைத்துக் கொண்டு பைக் விற்ற பணத்தில் இவர்கள் 4 பேரும் பங்கிட்டுக் கொள்வார்கள் என்பதும் தெரியவந்தது. ஒரு பைக் விற்பதன் மூலம் ஒரு நபருக்கு சுமார் 5 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும் என்றும் கருத்தப்பாண்டி போலீசில் கூறியுள்ளார். கிடைக்கும் பணத்தைக் கொண்டு தனது காதலியின் ஆசைகளை கருத்தப்பாண்டி நிறைவேற்றி வந்ததாகவும், திருமணத்துக்கு முன்பாகவே பெரிய வீடு கட்டவேண்டும் என்றும் தான் திட்டமிட்டிருந்ததாகவும் கருத்தபாண்டி கூறியுள்ளார்.
கருத்தப்பாண்டியின் காதலி, நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.காம் படித்து வருவதாகவும், காதலியை சந்திக்க பஸ்சில் வரும் கருத்தப்பாண்டி, பின்னர் பைக்கை திருடிவிட்டு சென்று விடுவதாக போலீசார் கூறினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.