Belly Dance in front of students! Teachers and parents condemned
பள்ளி மாணவர்கள் மத்தியில் பெண் ஒருவர் பெல்லி டான்ஸ் ஆடிய சம்பவம் நாமக்கல்லில் நடந்துள்ளது. இதற்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் அரசு பொருட்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான தொடக்க விழாவில், அரசு பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
தமிழக அரசு சார்பில் நடைபெறும் இந்த பொருட்காட்சியின் தொடக்க விழாவில், வெளிமாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஆபாச நடனம் ஆடியுள்ளார். இதனை எதிர்பார்க்காத மாணவர்களும், ஆசிரியர்கள், பொதுமக்கள் முகம் சுளித்தனர். ஆனாலும், இந்த நடன நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.
அரசு சார்பில் நடைபெறும் இந்த விழா மேடையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் புகைப்படம் இடம் பெற்றிருந்தன.
நடனத்தைப் பார்த்த பொதுமக்கள், பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பெல்லி டான்ஸ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களுக்கு அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
