Asianet News TamilAsianet News Tamil

தமிழ்நாட்டில் பிறப்பதே பாக்கியம். தமிழின் பெருமையை இன்னும் பலர் உணரவே இல்லை நடிகை ரோகினி பேச்சு...

Being born in Tamil Nadu is blessed Actress Rohini speech
Being born in Tamil Nadu is blessed Actress Rohini speech
Author
First Published Feb 6, 2018, 8:49 AM IST


நாகப்பட்டினம்

தமிழ்நாட்டில் பிறப்பதே பாக்கியம். தமிழின் பெருமையை இன்னும் பலர் உணரவில்லை என்று நாகப்பட்டினத்தில் நடைபெற்ற அரிமா சங்க நிகழ்ச்சியில் பேசிய நடிகை ரோகிணி பேசினார்.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் அரிமா சங்க மண்டல மாநாடு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு அரிமா சங்க மண்டலத் தலைவர் எஸ்.எஸ். தென்னரசு தலைமை வகித்தார். அரிமா சங்க மாவட்ட ஆளுநர் மருத்துவர் எஸ். வீரபாண்டியன், நடிகர் பி. அஜய்ரத்தினம், நடிகை ரோகிணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றுப் பேசினர்.

அரிமா சங்கத்தின் உடனடித் தலைவர் வெங்கட்ராமன், முதல் நிலை துணை ஆளுநர் ஷேக் தாவூத், இரண்டாம் நிலை ஆளுநர் கார்த்திக் பாபு, அவைச் செயலர் சந்தானம், பொருளாளர் மலர்விழி மாதவன்,

நிர்வாகி தில்லைவாணன், மேலாண்மைக் குழு புரவலர் எஸ். வேதநாயகம், தலைவர் அம்பாள் குணசேகரன், அரிவையர் சங்க நிர்வாகி மல்லிகா தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.

இந்த மாநாட்டில்  நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், காரைக்கால், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 110 சங்கங்களிலிருந்து 700-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கண்தானம் பெறுவதில் சிறப்பாக செயல்படும் வேதாரண்யம், ஆயக்காரன்புலம் பகுதி சங்க நிர்வாகிகளுக்கு பரிசளிக்கப்பட்டு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்த விழாவில் நடிகை ரோகிணி பின்வருமாறு பேசினார். "ஆறாவது அறிவை பெற்றுள்ள மனித சமூகம்தான் அழிவுக்கான எல்லாவற்றையும் செய்துவிட்டு, அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற முரண்பாடுகளோடு இருக்கிறது.

குறிப்பாக மது, புகை என ஆபத்தை தரக் கூடியவற்றை உற்பத்தி செய்துவிட்டு, அது கெடுதல் என பாதுகாத்துக் கொள்ளவும் எச்சரிக்கிறோம். இந்த முரண்பாடுகளிலிருந்து விடுபட பிறர் மீது அன்பு செலுத்துவது மட்டுமே தீர்வாகும்.

நல்ல புத்தகங்களும், ஆசான்களுமே ஒரு மனிதனின் மூளையை மேம்படுத்தி, அறிவுக் கூர்மையை வெளிப்படுத்துகிறது.

நான் அடிப்படையில் தெலுங்கு பெண் என்றாலும், தமிழில் பேசுவதுதான் எனது மன ஓட்டம். தமிழ் நாட்டில் பிறப்பதே பாக்கியம். தமிழின் பெருமையை இன்னும் பலர் உணரவே இல்லை" என்று அவர் பேசினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios