Because of over crowd in tirupathi devotees spend one day in ques

தர்ம தரிசனத்திற்கு பக்தர்கள் 24 மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை திருப்பதியில் ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் பெரிதும் அதிருப்தி அடைந்தனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

டிசம்பர் மாத கடைசி என்பதாலும், பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப் பட்டதாலும், திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று முன் தினம் ஞாயிறு மட்டும் பக்தர்கள் பெருமளவில் குவிந்தனர். ஏற்கெனவே, இம்மாத இறுதியில் ஒரு மணி நேரத்தில் இலவச தரிசனத்தை அமல் படுத்தி சோதனை முறையில் செயல்படுத்தப் போவதாக கூறியிருந்தனர். ஆனால், கடந்த மூன்று நாட்களாக திருப்பதியில் குவிந்த கூட்டத்தை சரியான வகையில் கையாளத் தெரியாமல் தேவஸ்தான நிர்வாகம் திணறியது.

சனி, ஞாயிறு, திங்கள் என தொடர்ந்து மூன்று நாட்களாக பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. அதனால், ஞாயிறும், திங்கள் கிழமை நேற்றும் தர்ம தரிசனத்தில் பக்தர்கள் 24 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 
வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 32 அறைகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. காத்திருப்பு அறைகளுக்கு வெளியிலும் ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். முன்னேற்பாடாக திட்டமிட்ட போதும், இந்த நெரிசலை சமாளிக்க முடியாமல் திணறினர். பக்தர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், பால் உள்ளிட்டவை கிடைக்காமல் பக்தர்கள் அவதிக்குள்ளாயினர். 

விடுமுறை நாட்களில் இப்படி கூட்டம் வரும் என்று தெரிந்திருந்தும், தேவஸ்தானம் சரியான வகையில் கையாளத் தவறிவிட்டதாக பலரும் குறை கூறினர்.