தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து பெங்களுர் செல்வோருக்கு ஏதுவாக பெங்களுரு - தருமபுரி இடையேயான மின்சார ரயில் சேவை இன்று முதல் தொடங்கியுள்ளது.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து பெங்களுர் செல்வோருக்கு ஏதுவாக பெங்களுரு - தருமபுரி இடையேயான மின்சார ரயில் சேவை இன்று முதல் தொடங்கியுள்ளது. தருமபுரி ரயில் நிலையம் வழியாக தமிழக மேற்கு மாவட்டங்கள், கேரளா, பெங்களுரூ, ஆந்திர மற்றும் வடமாநிலங்களுக்கு என நாள்தோறும் 30க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் இருந்து பெங்களுரு, ஓசூர் போன்ற நகரங்களுக்கு செல்லும் நூற்றுக்கணக்கான பயணிகளும், பள்ளி மாணவ - மாணவிகளும் இந்த ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பெங்களூரு - சேலம் மாவட்டம் ஓமலூர் இடையே மின்சார வழித்தடம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

முதற்கட்டமாக பெங்களுரு - ஓசூர் இடையே மின்சார மின்வழித்தடம் அமைக்கும் பணி நிறைவடைந்தது. இதனை அடுத்து, கடந்த 2020 ஆம் அண்டு டிசம்பர் முதல் பெங்களுரு - ஓசூர் இடையே மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் தருமபுரி வரை மின்வழித்தடம் அமைக்கும் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து, நடைபெற்ற ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்ததை அடுத்து, தருமபுரி வரை மின்சார ரயில் சேவை தொடங்கப்பட வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதை அடுத்து பெங்களுரு - ஓசூர் இடையே இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில் சேவை தருமபுரி ரயில் நிலையம் வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது.

அதன்படி, இன்று காலை 7.30 மணிக்கு பெங்களுருவில் புறப்பட்ட மின்சாரயில் ஓசூர், ராயக்கோட்டை, மாரண்டஅள்ளி, பாலக்கோடு வழியாக காலை 10.45 மணிக்கு தருமபுரி வந்தடைந்தது. மறு மார்க்கத்தில் மாலை 4.40 மணிக்கு தருமபுரியில் இருந்து புறப்படும் மின்சார ரயில் பாலக்கோடு, ராயக்கோட்டை, ஓசூர் வழியாக இரவு 7.20 மணிக்கு பெங்களுருவை சென்றடையும். இந்த மின்சார ரயில் மூலம் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து பெங்களுருவுக்கு பணிக்கு செல்வோர் மற்றும் பள்ளி, செல்லும் மாணவ - மாணவிகள் பயனடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
