Awesome horn skull lamp half burned sick terrar

தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள் செய்யும் அக்குறும்புகள் பத்தாது என்று அவ்வப்போது அமானுஷ்யங்களும், மர்மங்களும் தனி டிராக்கில் மக்களை உலுக்கியெடுப்பது வழக்கம். 
மண்ணில் விழுந்த விண்வெளி கல், கடல் கன்னி, வானில் பறந்த மனிதர்கள்...என்று எங்கிருந்தாவது ஒரு ஏழரையை கூட்டி கும்மியடிக்காவிட்டால் தூக்கம் வராது. அந்த வகையில் சமீபத்தில் நீலகிரி மாவட்டத்தில் புது பஞ்சாயத்தை கூட்டியிருக்கிறார்கள். அது...மர்ம உயிரினம் பற்றிய பீதிதான். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இது தொடர்பாக பரவும் செய்தி...கூடலூர் அருகே முதுமலை ஊராட்சிக்கு உட்பட்ட முதுகுளி பகுதியை சேர்ந்தவர் சிவபிரகாசாம் எனும் கூலி தொழிலாளி. நேற்று மாலையில் இவரது வீட்டுக்கு பின் பக்கம் ஏதோ விநோத சப்தம் வர, சென்று பார்த்தவர் அய்யோ! அம்மா! என அலறி மயங்கி சரிந்திருக்கிறார். காரணம் அங்கே விநோதமான உயிரினம் ஒன்று இருந்திருக்கிறது. இவரது சத்தத்தை கேட்டு ஓடி வந்த பக்கத்துவீட்டு நபர்களும் இந்த உயிரினத்தை பார்த்து அலறியடித்து ஓடியிருக்கிறார்கள். ஆனால் சில இளைஞர்கள் மட்டும் பரபரப்பின் இடையில் நின்று அதை போட்டோ எடுத்தனராம். எந்த படமும் உருப்படியில்லை. ஆனால் ’போக்கு’ என்பவர் எடுத்த போட்டோ கொஞ்சம் தெளிவாக வந்திருக்கிறது. 

சுமார் 4 அடி உயரத்தில் சிம்பான்ஸி போல் இருந்ததாம். தலையில் இரண்டு கொம்புகளிருக்க, மார்பு பகுதியில் ஏதோ விளக்கு போன்ற உருவம் கொண்ட நிலை தெரிந்திருக்கிறது. பாதி எரிந்த மனித உருவம் எழுந்து அமர்ந்தால் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது அது என்று பார்த்தவர்கள் சொல்லியதாக முதுமலை வட்டாரத்தையே இந்த பரபரப்பு போட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறது. 

கூடலூர் தாசில்தார் சிவகுமார் வந்து விசாரணை நடத்திவிட்டு சென்றிருக்கிறார். வனத்துறையும் ரோந்தில் பிஸியாக இருக்கிறது. ஆனால் அதன் பிறகு அந்த உயிரினம் தென்படவில்லையாம். ஆனாலும் பயம் குறையாத ஏரியா மக்கள் இரவில் கம்பு, தடியோடு ஊர்க்காவலில் இருக்கிறார்கள் என்று தகவல். 

ஆனால் அதே வேளையில் இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் ஒரு தகவல் கிளம்பியிருக்கிறது. கொஞ்ச நாட்களுக்கு முன் இதே நீலகிரி மாவட்டம் எல்லநள்ளி பகுதியில் ஊட்டி மெயின்ரோட்டில் ஐந்து தலை ராஜநாகம் இருப்பது போல் ஒரு கிராஃபிக்ஸ் படத்தை பரப்பி பீதியை கிளப்பினார்கள். அதே ஸ்டைல் வேலைதான் இதுவும்! என்று சொல்கிறார்கள். 

ஆனாலும் டெரர் மோடிலிருந்து மாறவில்லை நீலகிரி மாவட்டம்!