Avaniyapuram Jallikkattu : ஜல்லிக்கட்டு களத்தில் ஸ்டாலின், உதயநிதி..! அவனியாபுரத்தில் பரிசு மழை..
உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் சேப்பாக்கம் எம்.எல்.ஏ உதயநிதி ஆகியோர் சார்பிலும் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது
மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளில், சிறந்த காளையின் உரிமையாளருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் ஒரு காரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு உதயநிதி ஸ்டாலின் சார்பில் ஒரு பைக்கும் பரிசாக வழங்கப்படவுள்ளது. தமிழக அரசின் சார்பில் இந்தப் போட்டியை நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் தொடங்கிவைத்தனர். இதில் ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து தேர்வு செய்யப்பட்ட சுமார் 300 மாடுபிடி வீரர்களும், 700 காளைகளும் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் யாருமின்றி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் இடம் வெறிச்சோடி காணப்படுகிறது.
வழக்கம்போலவே ஜல்லிக்கட்டில் வெல்லும் மாடுபிடி வீரருக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கட்டில், பீரோ, ஃபேன், மிக்ஸி, கிரைண்டர், தங்கக் காசுகள் என அவனியாபுரத்தில் பரிசுப் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. ஒரு மணி நேரத்துக்கு 30 மாடுபிடி வீரர்கள் என்கிற வீதத்தில் களமிறக்கப்பட்டு பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது அவனியாபுரம் ஜலிக்கட்டு. iதில் சிறந்த காளையின் உரிமையாளருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் ஒரு காரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் சார்பில் ஒரு பைக்கும் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.