மதுராந்தகம் அருகே ஐந்து நாள்களாக ஏடிஎம் மையம் பூட்டியேக் கிடப்பதாலும், திறந்து இருக்கும் ஏ.டி.எம்மில் பணம் இல்லாததாலும் கோவமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மதுராந்தகம் சுற்று வட்டாரத்தில் உள்ள ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட வங்கிக் கிளைகளின் ஏடிஎம் மையங்களின் முன், வெயிலையும் பொருட்படுத்தாமல் வியாழக்கிழமை காலை முதல் பொதுமக்கள் நெடிய வரிசையில் காத்திருந்தனர்.

மதுராந்தகம், சோத்துப்பாக்கம், சித்தாமூர், கடப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாததால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

மதுராந்தகம் தேரடி வீதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏடிஎம் மையம் கடந்த 5 நாள்களாக பூட்டியே கிடக்கிறது.

கடப்பாக்கம், ஆலம்பரை குப்பம், வெண்ணாங்குபட்டு, பணையூர் குப்பம் உள்ளிட்ட பகுதி மக்கள் கடப்பாக்கம் இந்தியன் வங்கியின் ஏடிஎம் மையம் முன், காலை முதலே வரிசையில் நின்று பணம் எடுத்தனர்.

இந்த நிலையில், காலை 10 மணிக்கே பணம் தீர்ந்துவிட்டதால், வரிசையில் நின்று ஏமாற்றமடைந்த சுமார் 80-க்கும் மேற்பட்டோர் வங்கி மேலாளரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், கிழக்குக் கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, தகவலறிந்த செய்யூர் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் (பொறுப்பு), காவலாளர்கள் அங்குச் சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, பணம் வரவழைக்கப்பட்டு வழங்கப்படும் என வங்கி நிர்வாகத்தினர் உறுதியளித்தனர்.

இதைத் தொடர்ந்து, சுமார் பொதுமக்கள் பணம் வரவில்லையென்றால் மீண்டும் மறியலில் ஈடுபடுவோம் என்று எச்சரித்துவிட்டு மறியலை கைவிட்டனர்.