ஜல்லிக்கட்டு கிரிக்கெட்…வேகப்பந்து வீசிய மண்ணின் மைந்தன் அஸ்வின்..

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்சசநீதிமன்றம் தடை விதித்துள்ளதால் உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லுரில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. ஆனால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பிற்கு எதிராகவும் அலங்காநல்லுரில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

இளைஞர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அலங்காநல்லுரில் இன்று நான்காவது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்த கைதைக் கண்டித்தும்,பீட்டா அமைப்பை தடைசெய்ய வலியுறுத்தியும் சென்னை மெரினா கடற்கரையில் தன்னெழுச்சியாக திரண்ட இளைஞர்கள் தொடர்ந்து இரண்டு நாட்களாக விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதே போன்று மதுரை,கோவை, திருச்சி, திருநெல்வேலி,ஈரோடு, என தன்னெழுச்சியாக திரண்ட இளைஞர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்..

அதேநேரத்தில் ஜல்லிக்கட்டுக்கு திரையுலகினரும், கிரிக்கெட் வீரர்களும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜா, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். ஜல்லிக்கட்டுக்கு டிவிட்டர் பக்கம் மூலம் அவர் அளித்துவரும் ஆதரவு போராட்டக்காரர்களுக்கு உத்வேகமாக அமைந்துள்ளது.

தமிழக மக்களின் உணர்ச்சிக்களை புரிந்து, அவர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கிரிக்கெட் வீரர் முகமது கயிஃப் தனது டுவிட்டர் பக்கம் மூலம் ஆதரவை தெரிவித்தார்.

தமிழத்தில் அமைதியான முறையில் கல்லூரி மாணவர்கள் அறப்போராட்டம் நடத்துவதை பார்க்கும்போது, மகிழ்ச்சி அடைகிறேன். ஆர்வத்துடன் நடைபெறும் இந்த அறப்போராட்டத்தில் அமைதி தொடரவேண்டும். அமைதியான போராட்டம் எல்லோருக்கும் நல்லதொரு பாடமாக அமையும்.என கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் ஆதரவளித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக அமைதியான முறையில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போராட்டம் வெல்லும். பிரச்சினை தீரும் என்று சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் வேகப்பந்து வீசியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த மண்ணின் மைந்தன் அஸ்வின் ஆதரவு அளித்துள்ளது ஜல்லிக்கட்டுக்காக போராடும் இளைஞர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது.